உள்ளூர் செய்திகள்

கோவையில் இருந்து காத்மாண்டு வரை 7000 கிலோமீட்டர் மோட்டார் சைக்கிள் பேரணி

Published On 2022-12-14 09:28 GMT   |   Update On 2022-12-14 09:28 GMT
  • போலீஸ் கமிஷனர் தொடங்கி வைத்தார்/
  • பெண்களுக்கு எதிராக நடைபெறும் சைபர் கிரைம் குற்றங்கள் குறித்த விழிப்புணர்வு ஏற்படுத்தப்படுகிறது.

கோவை,

பெண்களுக்கு எதிராக நடைபெறும் சைபர் கிரைம் குற்றங்கள் குறித்த விழிப்புணர்வு ஏற்படுத்துவதற்காக கோவையில் இருந்து காத்மாண்டு வரை 7000 கிலோமீட்டர் தூரம் மோட்டார் சைக்கிள் பேரணியை போலீஸ் கமிஷனர் அலுவலகத்தில் கமிஷனர் பாலகிருஷ்ணன் தொடங்கி வைத்தார்.

பின்னர் அவர் நிருபர்களிடம் கூறியதாவது:-

கோவை மாநகரை பொறுத்தவரை சைபர் குற்றங்கள் நடப்பதற்கு முன்னதாகவே விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டு வருகிறது. சைபர் குற்றங்கள் நடைபெற்றதற்கு பின்பு பண இழப்புகள் ஏற்பட்டாலும் அதனை மீட்பதற்கான அனைத்து நடவடிக்கைகளையும் எடுத்து வருகிறோம்.

பல ஆயிரம் கிலோமீட்டர் அப்பாலுக்கு உள்ள நபர்கள் இந்த செயலில் ஈடுபட்டு வருகின்றனர். சைபர் கிரைம் குறித்து வழக்கு பதிவு செய்து குற்றவாளிகளை கைது செய்து வருகிறோம். பெண்களுக்கு எதிராக நடைபெறும் சைபர் கிரைம் குற்றங்கள் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்துவதற்காக 6 இளைஞர்கள் இங்கிருந்து காத்மாண்டு வரை 7 ஆயிரம் கிலோமீட்டர் மோட்டார் சைக்கிள் பயணத்தை தொடங்கி உள்ளனர். கல்லூரி மாணவ, மாணவிகள் எப்படி சமூக வலைதளங்களில் கவனமாக கையாள வேண்டும், எந்த மாதிரியான தகவல்களை பரிமாறக்கூடாது என்பது குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தி வருகிறோம்.

கடந்த சில நாட்களாக கிரைண்டர் மொபைல் ஆப்பை ஒரு சில நபர்கள் பதிவு செய்து அதனை பயன்படுத்தி அதன் மூலமாக பணம் பறித்து வருகிறார்கள். இது சம்பந்தமாக கோவை மாநகரில் 3 வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளது. ஒருவரை கைது செய்துள்ளோம்.

இரண்டு வழக்குகளில் விசாரணை நடைபெற்று வருகிறது. ஒரு மாதத்திற்கு 500 சைபர் கிரைம் புகார்கள் பதிவாகிறது. கிறிஸ்துமஸ் பண்டிகை மற்றும் புத்தாண்டு நெருங்குவதால் கோவை மாநகரில் 500 மீட்டருக்கு ஒரு தடுப்புகள் அமைக்கப்பட்டு போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபடுவர். கோவை - அவிநாசி சாலையில் அதிவேக பயணத்தை தடுப்பதற்காக 3 தனிப்படைகள் அமைக்கப்பட்டு போலீசார் ரோந்து பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.

இவ்வாறு அவர் கூறினார்.

Tags:    

Similar News