உள்ளூர் செய்திகள்

ஊட்டியில் சுகாதாரமற்ற முறையில் இயங்கிய 6 உணவகங்களுக்கு அபராதம்

Published On 2023-05-12 09:16 GMT   |   Update On 2023-05-12 09:16 GMT
  • சுகாதாரமற்ற மற்றும் கெட்டுப்போன சிக்கன் சுமார் 15 கிலோ கண்டறியப்பட்டு அழிக்கப்பட்டது.
  • துருப்பிடிக்காத பாத்திரங்களை மட்டுமே சமையலுக்காக பயன்படுத்த வேண்டும் என அறிவுறுத்தினர்.

ஊட்டி,

நீலகிரி மாவட்டத்தில் தற்போது கோடை விடுமுறை காரணமாக ஊட்டியில் நிலவக்கூடிய இதமான கால நிலையை அனுபவிக்க தமிழகத்தின் பிற பகுதிகள் மற்றும் வெளி மாநிலங்கள், வெளி நாடுகளில் இருந்து தினமும் சுற்றுலா பயணிகள் வந்த வண்ணம் உள்ளனர்.

இதனை தொடர்ந்து உணவகங்களில் வழங்கப்படும் உணவு பொருட்களின் தரம் குறைவாக இருப்பதாக பொதுமக்களிடம் இருந்து வந்த புகார்களின் அடிப்படையில் நீலகிரி மாவட்டம் முழுவதும் உள்ள உணவகங்களில் திடீர் ஆய்வு செய்து உணவு தரத்தினை உறுதி செய்யுமாறு மாவட்ட உணவு பாதுகாப்புத் துறைக்கு நீலகிரி மாவட்ட கலெக்டர் அம்ரித் உத்தரவிட்டார்.

இதன் அடிப்படையில் மாவட்ட நியமன அலுவலர் சுரேஷ் தலைமையில் உணவு பாதுகாப்பு அலுவலர்கள் நந்தகுமார் மற்றும் சிவராஜ் ஆகியோர் அடங்கிய குழு ஊட்டி கமர்சியல் ரோடு மற்றும் அதை சுற்றியுள்ள உணவகங்களில் திடீர் ஆய்வு மேற்கொண் டனர்.

இந்த ஆய்வில் சுகாதாரமற்ற மற்றும் கெட்டுப்போன சிக்கன் சுமார் 15 கிலோ கண்டறியப்பட்டு அழிக்கப்பட்டது. மேலும், சுகாதாரமற்ற முறையில் இயங்கி வந்த 6 உணவகங்களுக்கு தலா ரூ.2 ஆயிரம் வீதம் என மொத்தம் ரூ.12 ஆயிரம் அபராதம் விதிக்கப்பட்டது. உணவுப் பாதுகாப்புத்துறையின் நடவடிக்கையை தொடர்ந்து மேற்கூறிய உணவகங்கள் தங்கள் சமையலறை உள்ளிட்ட இடங்களில் தூய்மைப்படுத்தும் பணியினை தொடர்ந்து வருகின்றனர்.

இதுகுறித்து மாவட்ட நியமன அலுவலர் சுரேஷ் கூறியதாவது:-

நீலகிரி மாவட்டத்தில் செயல்பட்டு வரும் உணவகங்களில் அனைத்தும் தூய்மையான குடிநீர் மற்றும் நல்ல தரத்துடன் கூடிய உணவு பொருட்களை மட்டுமே பொதுமக்களுக்கு வழங்க வேண்டும். மேலும், அனைத்து உணவகங்களும் தங்களது உணவுப் பொருட்கள் தயாரிக்கும் இடத்தை தூய்மையாகப் பராமரிக்க வேண்டும். துருப்பிடிக்காத பாத்திரங்களை மட்டுமே சமையலுக்காக பயன்படுத்த வேண்டும். மேலும், சமையலுக்காக பயன்படுத்தப்படும் சமையல் எண்ணெயை ஒரு முறைக்கு மேல் பயன்படுத்த கூடாது எனவும் அறிவுறுத்தினார்.

உணவு பொருட்களை பரிமாறுவதற்கு செய்தி தாள்களை பயன்படுத்து வதை தவிர்க்குமாறும், இறைச்சி கடைகளில் பொட்டலமிட நெகிழி பொருட்களை பயன்படுத்த கூடாது எனவும் அறிவுறுத்தினார். மேலும் தவறு செய்பவர்கள் மீது உணவுப் பாதுகாப்பு தரங்கள் நிர்ணய சட்டத்தின் கீழ் கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என எச்சரிக்கை விடுத்தனர்.

Tags:    

Similar News