உள்ளூர் செய்திகள்

தனியார் ஆஸ்பத்திரிக்குள் புகுந்து தாக்கிய விவகாரம்-கைதான 5 பேரின் ஜாமீன் மனு 20- ந் தேதிக்கு ஒத்திவைப்பு

Published On 2022-06-15 15:09 IST   |   Update On 2022-06-15 15:09:00 IST
  • ஆஸ்பத்திரி கட்டிடத்தை வாடகை அடிப்படையில் நடத்த ஒப்பந்தம் போட்டு கொடுத்ததாக தெரிகிறது.
  • நீதிபதி சஞ்சீவி பாஸ்கரன் மனு மீதான விசாரணையை வருகிற 20-ந் தேதிக்கு ஒத்தி வைத்து உத்தரவிட்டார்.

கோவை

கோவை காந்திபுரத்தில் உள்ள ஒரு தனியார் ஆஸ்பத்திரியின் தலைவர் ராமச்சந்திரன்(வயது72). இவர் கடந்த 3 ஆண்டிற்கு முன்பு சென்னையை சேர்ந்த உமா சங்கர்(54) என்பவரிடம் ஆஸ்பத்திரி கட்டிடத்தை வாடகை அடிப்படையில் நடத்த ஒப்பந்தம் போட்டு கொடுத்ததாக தெரிகிறது.

இந்நிலையில், 100 கோடி ரூபாய் மதிப்பிலான தனது ஆஸ்பத்திரியை அபகரிக்க உமாசங்கர் முயற்சிப்பதாகவும், தனக்கு கொலை மிரட்டல் விடுத்ததாகவும் ராமச்சந்திரன் மாநகர குற்றப்பிரிவு போலீசில் புகார் அளித்தார்.

மேலும் ஆஸ்பத்திரி வளாகத்தில் ஒரு கும்பல் புகுந்து அங்கிருந்தவர்களை தாக்கியதாகவும் கூறப்பட்டது. இந்த விவகாரம் தொடர்பாக உமாசங்கர், அவரது மேலாளர் மருதவாணன் ஆகியோர் மீது ரத்தினபுரி போலீசார் வழக்குப்பதிவு செய்தனர். இந்த வழக்கில் ஜாமீன் பெற்ற உமாசங்கர் கண்ணப்ப நகர் பகுதியில் நடந்து சென்ற போது கார் மோதி பலியானார்.

இதற்கிடையே இந்த வழக்கானது சி.பி.சி.ஐ.டி போலீசார் வசம் ஒப்படைக்கப்பட்டது. போலீசார் விசாரணை நடத்தி வந்தனர். இந்நிலையில், கடந்த ஆண்டில் ஆஸ்பத்திரியில் நடந்த தாக்குதல் தொடர்பான வழக்கில் ஆஸ்பத்திரி தலைவர் ராமச்சந்திரன், உதவியாளர் காமராஜ் (45), மூர்த்தி (45), முருகேசன் (47), டிரைவர் பழனிசாமி ஆகிய 5 பேரையும் சி.பி.சி.ஐ.டி போலீசார் கைது செய்தனர். பின்னர் கோர்ட்டில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.

இதற்கிடையே கைதான 5 பேரும் ஜாமீன் கோரி கோவை தலைமை குற்றவியல் நடுவர் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்திருந்தனர். இந்த மனு மீதான விசாரணை இன்று நீதிபதி சஞ்சீவி பாஸ்கரன் முன்பு விசாரணைக்கு வந்தது. வழக்கை விசாரித்த நீதிபதி சஞ்சீவி பாஸ்கரன் மனு மீதான விசாரணையை வருகிற 20-ந் தேதிக்கு ஒத்தி வைத்து உத்தரவிட்டார்.

இந்த நிலையில் இவர்கள் 5 பேரையும் 7 நாள் காவலில் எடுத்து விசாரிக்க சி.பி.சி.ஐ.டி போலீசார் நேற்று மனு தாக்கல் செய்தனர். இந்த மனு மீதான விசாரணை இன்று நடைபெற உள்ளது குறிப்பிடத்தக்கது.

Tags:    

Similar News