பொதுமக்களிடம் பிடிபட்ட 4 பேரை படத்தில் காணலாம்.
அய்யலூர் அருகே சந்தேகத்திற்கிடமாக சுற்றிய 4 வாலிபர்களுக்கு தர்ம அடி
- இரவிலும் அவர்கள் தொடர்ந்து ஊருக்குள் சுற்றி வந்ததால் இன்று அதிகாலை அவர்கள் 4 பேரையும் பிடித்து விசாரித்தனர்.
- இப்பகுதியைச் சேர்ந்த ஒரு பெண்ணை தங்கள் நண்பருக்கு திருமணம் செய்து வைக்க கடத்திச் செல்ல வந்ததாக தெரிவித்தனர்.
வடமதுரை:
திண்டுக்கல் மாவட்டம் அய்யலூர் மற்றும் அதனை சுற்றியுள்ள கிராமங்களில் கடந்த சில நாட்களாக மோட்டார் சைக்கிள் திருட்டு, வாகனங்களில் பேட்டரிகள் திருட்டு ஆகியவை தொடர்ந்து நடைபெற்று வந்தன. இது போன்ற செயல்களில் ஈடுபடும் நபர்களை பிடிக்க உள்ளூர் இளைஞர்கள் இரவு நேரங்களில் தீவிர ரோந்து பணியில் ஈடுபட்டு வந்தனர்.
இந்நிலையில் நேற்று மாலை முதல் சுக்காம்பட்டி அய்யர் கலம் பகுதியில் சந்தேகத்திற்கிடமாக 4 பேர் அப்பகுதியில் சுற்றி வந்தனர். அவர்கள் உள்ளூர் இளைஞர்கள் இல்லை என்பதை உறுதி செய்த பொதுமக்கள் இரவு வரை அவர்களை கண்காணித்த னர். இரவிலும் அவர்கள் தொடர்ந்து ஊருக்குள் சுற்றி வந்ததால் இன்று அதிகாலை அவர்கள் 4 பேரையும் பிடித்து விசாரித்தனர்.
மேலும் தர்ம அடி கொடுத்து வடமதுரை போலீசாருக்கும் தகவல் தெரிவித்தனர். போலீசார் விசாரணையில் அவர்கள் திண்டுக்கல் மாவட்டம் சித்தரேவைச் சேர்ந்த முத்துகிருஷ்ணன் (வயது 24), புதுக்கோட்டை மாவட்டம் மேலஸ்தானம் பகுதியைச் சேர்ந்த ஹரி ஹரன் (24), தஞ்சையைச் சேர்ந்த அசோக்குமார் (35), திருவாரூர் மாவட்டம் பாலகுடியைச் சேர்ந்த அஜித்குமார் (25) என தெரிய வந்தது.
அவர்கள் இப்பகுதியைச் சேர்ந்த ஒரு பெண்ணை தங்கள் நண்பருக்கு திருமணம் செய்து வைக்க கடத்திச் செல்ல வந்ததாக தெரிவித்தனர். இதைக் கேட்டு அதிர்ச்சியடைந்த அப்பகுதி மக்கள் போலீசில் ஒப்படைத்து உரிய விசாரணை நடத்துமாறு கூறினர்.
போலீசார் தொடர்ந்து விசாரணை நடத்தி வரு கின்றனர். இச்சம்பவத்தால் அய்யலூர் பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.