பெங்களூருவில் இருந்து சேலத்துக்கு லாரியில் கடத்திய 4 டன் போதை பொருட்கள் சிக்கியது
- ஓமலூரை அடுத்த ஜோடுகுழி பகுதியில் அதிவேகமாக வந்த லாரியை தடுத்து நிறுத்தி சோதனை செய்தனர்.
- அதிகாரிகள் லாரியை ஓட்டி வந்த பெங்களூரு வாலிபரை பிடித்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.
சேலம்:
பெங்களூருவில் இருந்து சேலம் வழியாக அதிக அளவில் தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்கள் கடத்திய வருவதும் அதனை போலீசார் மற்றும் உணவு பாதுகாப்பு அதிகாரிகள் பறிமுதல் செய்வதும் அடிக்கடி நடந்து வருகிறது.
அதன் தொடர்ச்சியாக பெங்களூருவில் இருந்து நேற்றிரவு சேலம் மாவட்டத்திற்கு லாரியில் தடைசெய்யப்பட்ட புகையிலை போதை பொருட்கள் கடத்தி வருவதாக சேலம் மாவட்ட உணவு பாதுகாப்பு அதிகாரிக்கு ரகசிய தகவல் கிடைத்தது. இதையடுத்து உணவு பாதுகாப்பு நியமன அதிகாரி கதிரவன் தலைமையிலான அதிகாரிகள் நேற்றிரவு ஓமலூர் அருகே வாகன சோதனையில் ஈடுபட்டனர்.
அப்போது ஓமலூரை அடுத்த ஜோடுகுழி பகுதியில் அதிவேகமாக வந்த லாரியை தடுத்து நிறுத்தி சோதனை செய்தனர். அந்த லாரியில் தடை செய்யப்பட்ட 4 டன் போதை புகையிலை பொருட்கள் இருப்பது தெரிய வந்தது. அதனை மதிப்பீடு செய்யும் பணி தற்போது வரை நடைபெற்று வருகிறது.
இதையடுத்து லாரியுடன் அதனை பறிமுதல் செய்த அதிகாரிகள் லாரியை ஓட்டி வந்த பெங்களூரு வாலிபரை பிடித்து விசாரணை நடத்தி வருகிறார்கள். மேலும் விசாரணை முடிவில் டிரைவரை போலீசில் ஒப்படைக்கவும், வாகனம் மற்றும் குட்காவை கோர்ட்டில் ஒப்படைக்கவும் அதிகாரிகள் நடவடிக்கை எடுத்து வருகிறார்கள்.