உள்ளூர் செய்திகள்

மதுக்கரை சாலையில் ஆக்கிரமிப்புகள் அகற்றப்பட்ட பின்னரும் தொடங்காத 4 வழிச்சாலை பணி

Published On 2022-06-28 09:38 GMT   |   Update On 2022-06-28 09:38 GMT
  • நெடுஞ்சாலைத்துறையினர் நோட்டீஸ் அனுப்பியிருந்தனர்
  • தார் சாலையை கண்ணால் காண முடியாத அவல நிலை உள்ளது

குனியமுத்தூர்

கோவையில் பழுதடைந்த 16 சாலைகளை சீரமைக்க 140 கோடி ரூபாய் டெண்டர் விடப்பட்டது. அதில் சுந்தரா புரத்தில் இருந்து மதுக்கரை செல்லும் சாலையும் அடங்கும். சுந்தராபுரம் சந்திப்பில் இருந்து 1.8 கிலோ மீட்டர் தூரத்திற்கு சாலையை நான்கு வழிச்சாலையாக அமைக்க 10.2 கோடி ரூபாய் மதிப்பீட்டில் பணி தொடங்கப்படும் என்று நெடுஞ்சாலை துறையினர் அப்போது தெரிவித்திருந்தனர்.

கடந்த மாதம் 13-ந் தேதி ஆக்கிரமிப்புகள் 15 நாட்களுக்குள் அகற்றப்பட வேண்டும் என்று நெடுஞ்சாலைத்துறையினர் நோட்டீஸ் அனுப்பி யிருந்தனர். அதன்படி ஆக்கிரமிப்பு செய்தவர்கள் ஆக்கிரமிப்புகளை படுவேகமாக அகற்றி வருகின்றனர்.

மேலும் அமைச்சர் செந்தில் பாலாஜி நான்கு வழி பணி தொடக்கத்துக்கு பூஜை செய்து தொடங்கி வைத்தார். அந்த ஜூன் முதல் வாரத்திலேயே பணி தொடங்கப்படும் என்று நெடுஞ்சாலைத்துறையினர் தெரிவித்து இருந்தனர். ஆனால் ஆக்கிரமிப்புகள் அனைத்தும் அகற்றப்பட்ட போதிலும் இன்னும் சாலை அமைக்கும் பணி தொடங்கப்படவில்லை என்று பொதுமக்கள் குறை கூறி வருகின்றனர்.

சுந்தராபுரம் மதுக்கரை ஈரோட்டில், சுந்தராபுரம் சந்திப்பில் இருந்து மேம்பாலம் வரை தார் சாலையை கண்ணால் காண முடியாத அவல நிலை உள்ளது. சாலை முழுவதும் குண்டும் குழியுமாக புழுதி படர்ந்த நிலையில் காட்சியளிக்கிறது. இதனால் வாகன ஓட்டிகள் மிகவும் மனமுடைந்த நிலையில் உள்ளனர்.

பழுதடைந்த சாலை காரணத்தால் ஆங்காங்கே அவ்வப்போது விபத்துகள் நடந்து வருகிறது. சுந்தராபுரம் மதுக்கரை சாலையில் பயணம் செய்யும் வாகன ஓட்டிகள் வெறுப்படைந்த மன நிலையில் , குறுக்கு சாலை வழியாக பொள்ளாச்சி ரோட்டில் சென்று பயணிக்க வேண்டிய நிலை உள்ளது. வாகன ஓட்டிகள் இந்தசாலையில் பயணத்தை தவிர்ப்பதால் வியாபாரம் பாதிக்கப்படுகிறது என்று வியாபாரிகள் தெரிவிக்கின்றனர்.

மேலும் ஆங்காங்கே பாதாளசாக்கடை பணிக்காக சாலையை பிளாக் செய்து டிவைடர் வைத்து விடுகின்றனர். வாகன ஓட்டிகளுக்கு இதுவும் ஒரு பெரிய தலைவலியாக உள்ளது. குண்டும் குழியுமான சாலை காரணத்தால் குழந்தைகளை அழைத்துக்கொண்டு இரு சக்கர வாகனத்தில் செல்பவர்கள் ஆங்காங்கே விழுந்து எழுந்து செல்லும் நிலையும் காணப்படுகிறது.

இன்னும் சொல்ல ப்போனால் மழை காலம் தொடங்கி விட்டால் சாலை முழுவதும் சேறும் ச கதியுமாக காட்சி அளிக்கும். அதனை எப்படி சமாளிக்கப் போகிறோம் என்று அப்பகுதி மக்கள் புலம்பி வருகின்றனர். நல்ல அறிவிப்புகளை கிடப்பில் போடாமல் உடனே அதை செய்து முடிக்க வேண்டும் என்றும், மழைக்காலம் தொடங்குவதற்கு முன்பு நான்கு வழி சாலை அமைக்கும் பணியை தொடங்க வேண்டும் என்று பொதுமக்களும் , வாகன ஓட்டிகளும் கோரிக்கை விடுத்து வருகின்றனர்.

Tags:    

Similar News