உள்ளூர் செய்திகள்

கோவையில் பிளஸ்-2 பொதுத் தேர்வில் 339 பள்ளிகள் 90 சதவீதத்துக்கும் மேல் தேர்ச்சி

Published On 2023-05-10 09:25 GMT   |   Update On 2023-05-10 09:25 GMT
  • மாநில அளவில் கோவை 4-ம் ரேங்க் பட்டியலில் உள்ளது.
  • 89-80 சதவீத தேர்ச்சியை 21 பள்ளிகளும், 79 சதவீத தேர்ச்சியை ெவறும் மூன்று பள்ளிகள் மட்டுமே பெற்றுள்ளன.

கோவை,

கோவை மாவட்டத்தில் 363 பள்ளிகள் பிளஸ்-2 பொதுத் தேர்வு எழுதியதில், 339 பள்ளிகளில் 90 சதவீதத்திற்கும் மேல் தேர்ச்சியடைந்துள்ளனர்.

கொரோனா தொற்றுக்கு பின் முழுமையாக பள்ளிகளை இயக்கி நடத்தப்பட்ட முதல் தேர்வு என்பதால் பிளஸ்-2 தேர்வு முடிவில் அதிக எதிர்பார்ப்பு இருந்தது. இதில், ஆப்சென்ட் பட்டியல் நீண்டதோடு முக்கிய பாடங்களில், கடின வகை கேள்விகளே அதிகம் இடம்பெற்றிருந்தது.

அரசுப்பள்ளி மாணவர்களின் வருகைப்பதிவும் குறைந்ததால், தேர்ச்சி சதவீதம் பாதிக்கப்படுமோ என்ற கருத்து எழுந்தது. ஆனால் தேர்வு முடிவு மாணவர்களுக்கு சாதகமாகவே இருந்ததோடு, தேர்ச்சி சதவீதமும் அதிகரித்தது. கோவை மாவட்டத்தில் 363 பள்ளிகளில் இருந்து மாணவர்கள் பிளஸ்-2 பொதுத்தேர்வு எழுதியதில் 97.57 சதவீத தேர்ச்சி விழுக்காடு பெற்றது.

மாநில அளவில் 4-ம் ரேங்க் பட்டியலில் இருந்தாலும், 0.28 சதவீதத்தில் தான், முதலிடத்தை தவற விட்டது. ஒட்டு மொத்த தேர்ச்சி சதவீதம் இப்படியிருக்க, 90 சதவீதத்திற்கும் மேல், தேர்ச்சி அடைந்த பள்ளிகள் மட்டுமே 339 என்பது குறிப்பிடத்தக்கது.

இதேபோல், 89-80 சதவீத தேர்ச்சியை 21 பள்ளிகளும், 79 சதவீத தேர்ச்சியை ெவறும் மூன்று பள்ளிகள் மட்டுமே பெற்றுள்ளன.

இதன்மூலம், மாணவர்களுக்கு போதிய பயிற்சி அளித்ததற்கு, கை மேல் பலன் கிடைத்ததாக, ஆசிரியர்கள் பெருமிதத்துடன் கூறினர்.

முதுகலை பட்டதாரி ஆசிரியர்கள் கூறுகையில், கோவை உள்ளிட்ட ஒன்பது மாவட்டங்களுக்கு பள்ளி அளவில் நடத்தப்பட்ட தேர்வுகளுக்கும் இயக்குனரகத்தில் இருந்து வினாத்தாள் அனுப்பி நடத்தப்பட்டது. இதில் கேள்விகள் சிந்தித்து எழுதும் படியாக இருந்தது.

பொது வினாத்தாள் முறையில் பதிலளிக்க, மாணவர்களுக்கு பயிற்சி வழங்கப்பட்டது. இது பொதுத் தேர்வு முடிவில் மிகப்பெரிய தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளது. பள்ளிகளில் வினாத்தாளை பிரிண்ட் அவுட் எடுப்பதில் உள்ள நடைமுறை சிக்கல்களை தவிர்த்தால் இத்திட்டம் மாணவர்களின் கல்வித்தரத்தை உயர்த்தும் என்றனர்.

Tags:    

Similar News