சங்கரன்கோவில் அருகே நாய்கள் கடித்து 32 ஆடுகள் பலி
- ஆட்டுக்கொட்டகைக்குள் சென்ற நாய்கள் ஆடுகளை கடித்து குதறியதாக கூறப்படுகிறது.
- நாய்களால் அப்பகுதி பொதுமக்களுக்கும், கால்நடைகளுக்கும் அச்சுறுத்தல் ஏற்படுவதாக கூறப்படுகிறது.
சங்கரன்கோவில்:
சங்கரன்கோவில் அருகே உள்ள தெற்கு சங்கரன்கோவில் பஞ்சாயத்துக்கு உட்பட்ட செந்தட்டியை சேர்ந்தவர் சரவணன் (வயது39). இவர் செந்தட்டியில் இருந்து வேப்பங்குளம் செல்லும் சாலையில் ஆட்டு கொட்டகை அமைத்து அங்கு சுமார் 41 ஆடுகளை பராமரித்து வந்ததாக கூறப்படுகிறது.
இந்நிலையில் நேற்று இரவு அந்த ஆட்டுக்கொட்டகைக்குள் சென்ற நாய்கள் ஆடுகளை கடித்து குதறியதாக கூறப்படுகிறது. இதில் 24 செம்மறி ஆடுகளும் 8 வெள்ளாடுகளும் உயிரிழந்தன. மேலும் நாய்கள் கடித்ததில் 9 ஆடுகள் பலத்த காயமடைந்துள்ளன.
நாய்கள் கூட்டமாக சென்று ஆடுகளைக் கடித்து குதறும் காட்சிகள் அங்கிருந்த சி.சி.டி.வி.யில் பதிவாகி உள்ளது. மேலும் அப்பகுதியில் நாய்கள் தொல்லை அதிக அளவில் இருப்பதாகவும், அவற்றால் பொதுமக்களுக்கும், கால்நடைகளுக்கும் அச்சுறுத்தல் ஏற்படுவதாகவும் கூறப்படுகிறது. இது குறித்து சம்பந்தப்பட்ட துறையினர் நடவடிக்கை எடுக்க வேண்டும் என அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.