உள்ளூர் செய்திகள்
கும்மிடிப்பூண்டி பேரூராட்சியில் கவுன்சிலர் கூட்டம் நடைபெற்ற காட்சி

கும்மிடிப்பூண்டியில் தூய்மை பணியில் பேரூராட்சி நிர்வாகம் அலட்சியம் காட்டுகிறது- கவுன்சிலர்கள் குற்றச்சாட்டு

Published On 2022-06-04 08:45 GMT   |   Update On 2022-06-04 08:45 GMT
கும்மிடிப்பூண்டி பேரூராட்சியில் இறப்பு பதிவு செய்ய தனியாக ஒரு மருத்துவரை நியமிக்கவேண்டும். சொத்து வரி பெயர் மாற்றம் செய்ய நிர்ணயிக்கப்பட்ட கட்டணத்தை குறைக்க வேண்டும்.

கும்மிடிப்பூண்டி:

கும்மிடிப்பூண்டி பேரூராட்சி அலுவலகத்தில் பேரூராட்சி தலைவர் ஷகிலா தலைமையில் கவுன்சிலர்கள் கூட்டம் நடைபெற்றது. செயல் அலுவலர் யமுனா துணைத்தலைவர் கேசவன் முன்னிலை வகித்தனர்.

பிறப்பு-இறப்பு, வரவுசெலவுத்திட்டம் கவுன்சிலர்களின் கோரிக்கை உட்பட 24 தீர்மானங்கள் கூட்டத்தில் நிறைவேற்றப்பட்டன.

கூட்டம் தொடங்கியதும் ஒட்டுமொத்த கவுன்சிலர்களும் பேரூராட்சியின் தூய்மை பணிகள் செய்துதரப்படவில்லை என்று கடுமையாக சாடினர். தொடர்ந்து புகார் தெரிவித்தும் தூய்மை பணிகளில் பேரூராட்சி நிர்வாகம் அலட்சியம் காட்டி வருவதாக கூறினர். அதை தொடர்ந்து கவுன்சிலர்கள் சிலர் கோரிக்கைகளை முன்வைத்தனர்.

மேலும் காந்திநகர் 11-வது வார்டில் நரிக்குறவர்கள் சுமார் 25 குடும்பங்கள் உள்ளன. இவர்களுக்கு சரியான குடிநீர் வசதி செய்து தர வேண்டும் தற்போது உள்ள குழாய்கள் பழமையானதும் சேதமடைந்தும் இருப்பதால் இதனை முறையாக மாற்றி தரவேண்டும்.

இறப்பு பதிவு செய்வதற்கு மருத்துவர் சான்று பெறமுடியாமல் பலர் தவித்து வருகின்றனர். கும்மிடிப்பூண்டி பேரூராட்சியில் இறப்பு பதிவு செய்ய தனியாக ஒரு மருத்துவரை நியமிக்கவேண்டும். சொத்து வரி பெயர் மாற்றம் செய்ய நிர்ணயிக்கப்பட்ட கட்டணத்தை குறைக்க வேண்டும்.

9-வது வார்டுக்கு உட்பட்ட பகுதியில் குரங்குகளின் அட்டகாசம் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது வனத்துறையினரிடம் தெரிவித்து அவற்றை பிடிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.

கோட்டக்கரை அன்னா நகர் பகுதியில் ஆபத்தாக உள்ள மின் கம்பங்களை மாற்ற வேண்டும் என்று கவுன்சிலர்கள் கோரிக்கை வைத்தனர். அதன் மீது துரித நடவடிக்கை எடுக்கப்படும் என செயல் அலுவலர் யமுனா தெரிவித்தார்.

Tags:    

Similar News