உள்ளூர் செய்திகள்
கலைவாணர் அரங்கில் தொடங்கப்பட்டுள்ள மலர்கண்காட்சி

சென்னையில் மலர் கண்காட்சியை தொடங்கி வைத்தார் உதயநிதி ஸ்டாலின்

Published On 2022-06-03 13:04 IST   |   Update On 2022-06-03 13:04:00 IST
மலர் கண்காட்சியின் ஒரு பகுதியாக காய்கறி மற்றும் பழங்களால் உருவாக்கப்பட்ட பகுதி பார்வையாளர்களை கவரும் வகையில் அமைக்கப்பட்டுள்ளது.
சென்னை:

கருணாநிதி பிறந்தநாளையொட்டி சென்னை கலைவாணர் அரங்கில் இன்று முதல் 3 நாட்களுக்கு மலர் கண்காட்சி நடக்கிறது.

தோட்டக்கலை துறை சார்பில் ஏற்பாடு செய்யப்பட்டுள்ள இந்த மலர் கண்காட்சியை இன்று காலை உதயநிதி ஸ்டாலின் எம்.எல்.ஏ. தொடங்கி வைத்தார். பின்னர் மலர் கண்காட்சியை அவருடன் அமைச்சர்கள் எம்.ஆர்.கே. பன்னீர்செல்வம், மா.சுப்பிரமணியன் ஆகியோர் பார்வையிட்டனர்.

இந்த கண்காட்சியில் 128 வகைகளை கொண்ட 4 லட்சம் மலர்கள் இடம்பெற்றுள்ளன.



இந்த வண்ண மலர்கள் வெவ்வேறு உருவங்களில் வடிவமைக்கப்பட்டுள்ளன. சிங்கம், கரடி, முயல், மான் போன்ற வடிவங்கள் மலர்களால் உருவாக்கப்பட்டுள்ளன. அவ்வைக்கு நெல்லிக்கனி கொடுத்த அதியமான், தமிழ் பாரம்பரிய பண்பாட்டை விளக்கும் வகையிலும் மலர்கள் காட்சிப்படுத்தப்பட்டுள்ளன.

மலர்களின் அருகில் நின்று செல்பி எடுக்கும் பகுதிகள், மலர் வளைவுகள், மலர்களால் ஆன பஸ், தேர், இருக்கைகள், மலர் தொட்டி அடுக்குகளால் ஆன வடிவமைப்புகள் ஆகியவையும் இடம்பெற்றுள்ளன. இந்த மலர்கள் ஊட்டி, ஓசூர், திண்டுக்கல், பெங்களூர், புனே போன்ற இடங்களில் இருந்து கொண்டுவரப்பட்டுள்ளன.



மலர் கண்காட்சியின் ஒரு பகுதியாக காய்கறி மற்றும் பழங்களால் உருவாக்கப்பட்ட பகுதி பார்வையாளர்களை கவரும் வகையில் அமைக்கப்பட்டுள்ளது.

மேலும் விவசாய பொருட்களும் கண்காட்சியில் இடம் பெற்றுள்ளன. நறுமணப் பொருட்களான கிராம்பு, ஏலக்காய் மூலம் உருவாக்கப்பட்ட மாடு, விவசாயிகளின் உருவம் போன்றவையும் உள்ளன.

இந்த கண்காட்சியில் உள்ள மலர்கள் வாடாமல் இருக்கவும், அதன் தன்மை மாறாமல் இருக்கவும் கண்காட்சி அரங்கம் முழுவதும் குளிர்சாதன வசதி செய்யப்பட்டுள்ளது.


இந்த மலர் கண்காட்சியை பொதுமக்கள் பார்வையிடலாம். பெரியவர்களுக்கு ரூ.50-ம், சிறுவர்களுக்கு ரூ.20-ம் கட்டணம் நிர்ணயிக்கப்பட்டுள்ளது. வருகிற 5-ந்தேதி வரை 3 நாட்கள் இந்த மலர் கண்காட்சி நடக்கிறது. காலை 9 மணி முதல் இரவு 8 மணிவரை பொதுமக்கள் கண்காட்சியை பார்வையிட ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
Tags:    

Similar News