உள்ளூர் செய்திகள்
கோப்புப்படம்

நெல்லையில் 9 ஆடுகளை விஷம் வைத்து சாகடித்த விவசாயி மீது வழக்கு

Published On 2022-06-02 15:47 IST   |   Update On 2022-06-02 15:47:00 IST
நெல்லையை அடுத்த வேப்பங்குளத்தில் 9 ஆடுகள் விஷம் வைத்து சாகடிக்கப்பட்டது தொடர்பாக நிலத்தின் உரிமையாளர் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்தனர்.
நெல்லை:

நெல்லையை அடுத்த வேப்பங்குளம் மணி நகரை சேர்ந்தவர் பெருமாள். அதே பகுதியை சேர்ந்தவர் சப்பாணி.

இவர்களது 9 ஆடுகள் மற்றும் சத்திரம் புதுகுளத்தை சேர்ந்த சந்தனராஜ் என்பவருக்கு சொந்தமான 6 மாடுகள் ஆகியவை சத்திரம் புதுக்குளம் பகுதியில் உள்ள கோபால்(65) என்பவருக்கு சொந்தமான தோட்டத்தில் மேய்ந்து கொண்டிருந்தன.

இந்நிலையில் அவை அனைத்தும் திடீரென வாயில் நுரை தள்ளி அடுத்தடுத்து மயங்கி விழுந்தன. இதில் 9 ஆடுகளும் இறந்துவிட்டன. 6 மாடுகள் மயக்கம் அடைந்தன.

அதனை கால்நடை டாக்டர்கள் பரிசோதனை செய்தபோது அவை விஷம் கலந்த செடிகளை தின்றது தெரியவந்தது. இதுதொடர்பாக கால்நடைகளின் உரிமையாளர்கள் தச்சநல்லூர் போலீசில் புகார் அளித்தனர்.

அதன்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து கோபாலிடம் விசாரித்தனர். அதில், வயலில் உளுந்து சாகுபடி செய்திருந்ததை கால்நடைகள் அவ்வப்போது புகுந்து நாசமாக்கியதால் அரிசியுடன் குருனை மருந்தை கலக்கி செடிகளில் தெளித்தது தெரியவந்தது.  

இதுதொடர்பாக அவர் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்து அவரிடம் விசாரித்து வருகின்றனர்.
Tags:    

Similar News