உள்ளூர் செய்திகள்
குமாரபாளையம் அருகே பெண்ணிடம் நகை பறிக்க முயன்ற 2 பேர் கைது
குமாரபாளையம் அருகே பெண்ணிடம் நகை பறிக்க முயன்ற 2 பேரை போலீசார் கைது செய்தனர்.
குமாரபாளையம்:
ஈரோடு மாவட்டம் பவானி அடுத்த சித்தார் பகுதியை சேர்ந்தவர் பாலசுப்ரமணியம்(வயது 33), விவசாயி. இவரது மனைவி சுதா. இவர்களுக்கு 3 வயதில் குழந்தை உள்ளது.
இவர்கள் குடும்பத்துடன் கோவிலுக்கு மோட்டார் சைக்கிளில் சென்றுவிட்டு மீண்டும் வீட்டிற்கு திரும்பி வந்து கொண்டிருந்தனர். அப்போது குமாரபாளையம் கல்லூரி அருகே மோட்டார்சைக்கிளை பாலசுப்பிரமணியம் ஓட்டி வந்தார். பின்னால் அமர்ந்திருந்த குழந்தையுடன் சுதா அமர்ந்திருந்தார்.
அப்போது அந்த வழியாக நம்பர் பிளேட் இல்லாத மோட்டார்சைக்கிளில் மர்ம நபர்கள் வந்தனர். அவர்கள் திடீரென சுதாவின் கழுத்தில் அணிந்திருந்த தங்க தாலியை பறிக்க முயன்றனர். உடனே பாலசுப்ரமணி வாகனத்தை ஓரமாக நிறுத்திவிட்டு சத்தம் போட்டார்.
சத்தம் கேட்டு அக்கம் பக்கம் உள்ளவர்கள் திரண்டு நகை பறிக்க முயன்றவர்களை மடக்கி பிடித்தனர்.
விசாரணையில், அவர்கள் சேலம் மாவட்டம் வெள்ளைக்கல்பட்டியை சேர்ந்த வினோத்(21), சின்னப்பம்பட்டியை சேர்ந்த குமார்(20) என்பது தெரியவந்தது. இது குறித்து குமாரபாளையம் போலீசில் புகார் செய்யப்பட்டது.
போலீசார் 2 பேரையும் கைது செய்து அவர்களிடம் இருந்து மோட்டார்சைக்கிள், 2 செல்போன்களையும் பறிமுதல் செய்தனர்.