உள்ளூர் செய்திகள்
சிறந்த அலங்காரம் அமைத்தவர்களுக்கு கலெக்டர் அம்ரித் பரிசு கோப்பையை வழங்கிய காட்சி.

2 நாளில் குன்னூர் பழ கண்காட்சியை 26 ஆயிரம் பேர் கண்டு ரசித்தனர்

Published On 2022-05-30 09:16 GMT   |   Update On 2022-05-30 09:16 GMT
மழையையும் பொருட்படுத்தாமல், சுற்றுலா பயணிகள் குடைபிடித்த படியும், சிலர் மழையில் நனைந்தபடியும் கண்காட்சியை பார்வையிட்டனர்.
ஊட்டி:

நீலகிரி மாவட்டத்தில் கோடைவிழா கடந்த 7-ந் தேதி முதல் தொடங்கி நடைபெற்று வருகிறது. குன்னூர் சிம்ஸ் பூங்காவில் 62-வது பழ கண்காட்சி நேற்றுமுன்தினம் தொடங்கியது.

கண்காட்சியையொட்டி பூங்கா நுழைவு வாயில் பல்வேறு பழங்களால் அலங்கரிக்கப்பட்டு இருந்தது. திராட்ைச பழங்களை கொண்டு ராட்சத கழுகு அலங்காரம், தேன் வண்டு, பாண்டாகரடி, புலி, டிராகன், மயில் தாஜ்மஹால் உள்ளிட்டவையும் இடம் பெற்றிருந்தது.

 பழ கண்காட்சி நேற்றுடன் நிறைவடைந்தது. இதனையொட்டி காலை முதலே குன்னூர் சிம்ஸ் பூங்காவில் சுற்றுலா பயணிகள் கூட்டம் அலைமோதியது. 

அவர்கள் பூங்காவில் பழங்களால் அலங்கரிக்கப்பட்டிருந்த டிராகன், மயில், புலி, தாஜ்மஹால், பூண்டி அணை உள்ளிட்டவற்றை கண்டு ரசித்து புகைப்படமும் எடுத்து மகிழ்ந்தனர்.

குன்னூரில் நேற்று மதியத்திற்கு பிறகு கனமழை கொட்டி தீர்த்தது. ஆனால் மழையையும் பொருட்படுத்தாமல், சுற்றுலா பயணிகள் குடைபிடித்த படியும், சிலர் மழையில் நனைந்தபடியும் கண்காட்சியை பார்வையிட்டனர்.

பழ கண்காட்சியை நேற்று முன்தினம் 10,500 பேரும், நேற்று 15, 500 பேர் என  2 நாட்களில் 26 ஆயிரம் சுற்றுலா பயணிகள் பார்வையிட்டுள்ளனர். நிறைவு நிகழ்ச்சியில் சிறந்த அலங்காரங்கள் அமைத்தவர்களுக்கு பரிசு வழங்கும் விழா பூங்காவில் நடைபெற்றது. 

விழாவில் கலெக்டர் அம்ரித் பங்கேற்று, சிறந்த அலங்காரம் அமைத்தவர்களுக்கு சுழல் கோப்பை உள்பட 102 பேருக்கு கோப்பைகளை வழங்கினார்.
Tags:    

Similar News