உள்ளூர் செய்திகள்
பழைய பென்சன் திட்டத்தை முதல்வர் செயல்படுத்துவார்
பழைய பென்சன் திட்டத்தை முதல்வர் செயல்படுத்துவார் என அரசு ஊழியர் சங்க பொதுச்செயலாளர் பேட்டி அளித்துள்ளார்.
சிவகங்கை
சிவகங்கை கலெக்டர் அலுவலக நுழைவு வாயிலில் தமிழ்நாடு அரசு ஊழியர் சங்கத்தின் சார்பில் பழைய பென்சன் திட்டத்தை நிறைவேற்றுதல், அகவிலைப்படி உயர்வு, சரண்விடுப்பு, உள்ளிட்ட கொரோனா காலத்தில் பறிக்கப்பட்ட சலுகைகளை உடனே வழங்குதல், காலிபணியிடங்களை நிரப்புதல் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி தர்ணா போராட்டம் நடந்தது.
இதில் மாநில பொதுச் செயலாளர் செல்வம் தலைமையில் ஏராளமானோர் பங்கேற்றனர். பின்னர் அவர் நிருபர்களிடம் கூறியதாவது:-
பழைய பென்சன் திட்டத்தை முதல்வர் மு.க. ஸ்டாலின் அமல்படுத்துவார் என்ற நம்பிக்கை உள்ளது. போராட்டத்தில் ஈடுபடுபவர்களை அழைத்து பேச வேண்டும்.
பழைய பென்சன் திட்டத்தை செயல்படுத்துவதில் தற்சமயம் சிக்கல் இருப்பதாக நிதித்துறை அமைச்சர் தெரிவித்தாலும் முதல்வர் அதனை நிறைவேற்றுவார் என்கிற நம்பிக்கை உள்ளது.
போராட்டத்தில் ஈடுபட்டுவருபவர்களிடம் அரசு பேச்சுவார்த்தை நடத்த வேண்டும். கடந்த முறை நடந்த கூட்டத்தில் எடுத்த தீர்மானத்தின்படி தெருமுனை பிரசாரம் மற்றும் ஆய்வு கூட்டங்கள் நடத்தி எதிர்ப்பை அரசுக்கு தெரிவிப்போம்.இவ்வாறு அவர் கூறினார்.
தர்ணா போராட்டத்தில் ஏராளமான உறுப்பினர்கள் கலந்துகொண்டு மத்திய, மாநில அரசுகளுக்கு கோரிக்கைகளை வலியுறுத்தி கோஷங்களை எழுப்பினர்.