உள்ளூர் செய்திகள்
மழை

தமிழகத்தில் 14 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு

Published On 2022-05-29 13:18 IST   |   Update On 2022-05-29 13:18:00 IST
தமிழகம், புதுவை, காரைக்கால் பகுதிகளில் ஒரு சில இடங்களில் இன்று இடி மின்னலுடன் லேசான மழை பெய்யக் கூடும்.

சென்னை:

கேரளாவில் தென்மேற்கு பருவமழை தொடங்கி உள்ளது. இதன் காரணமாக தமிழகத்திலும் 14 மாவட்டங்களில் கன மழைக்கு வாய்ப்பு இருப்பதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

இதுகுறித்து வானிலை ஆய்வு மைய இயக்குனர் செந்தாமரை கண்ணன் கூறியதாவது:-

கேரளா மற்றும் அதனையொட்டியுள்ள பகுதிகளில் தென்மேற்கு பருவமழை தொடங்கியுள்ளது. தமிழகம், புதுவை, காரைக்கால் பகுதிகளில் ஒரு சில இடங்களில் இன்று இடி மின்னலுடன் லேசான மழை பெய்யக் கூடும்.

நீலகிரி, கோவை, தேனி, திண்டுக்கல், திருப்பூர், தென்காசி, விருதுநகர், மதுரை, திருநெல்வேலி, கன்னியாகுமரி, வேலூர், ராணிப்பேட்டை, திருவண்ணாமலை ஆகிய 14 மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கனமழை பெய்ய வாய்ப்பு உள்ளது. 30, 31, 1, 2, ஆகிய தேதிகளில் தமிழகத்தில் ஒரு சில பகுதிகளில் லேசான மழை பெய்யும்.

சென்னையை பொறுத்த வரை அடுத்த 24 மணிநேரத்திற்கு வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். நகரின் சில இடங்களில் இடி மின்னலுடன் லேசான மழை பெய்யக்கூடும்.

இன்றும், நாளையும் லட்சத்தீவு, தென்கிழக்கு அரபிக்கடல், கேரளா மற்றும் அதனை ஒட்டிய குமரிக்கடல் தென் தமிழக கடலோரப் பகுதிகள் மற்றும் மன்னார் வளைகுடா பகுதிகளில் சூறாவளிக்காற்று மணிக்கு 40 முதல் 50 கி.மீ வேகத்திலும் இடையிடையே 60 கி.மீ வேகத்திலும் வீசக்கூடும்.

மேற்குறிப்பிட்ட நாட்களில் மீனவர்கள் இந்த பகுதிகளுக்கு செல்ல வேண்டாம் என்று அறிவுறுத்தப்படுகிறார்கள்.

கடந்த 24 மணிநேரத்தில் மதுரை தல்லாகுளம் 7 செ.மீ, கள்ளிக்குடி, மதுரை தெற்கு தலா 6 செ.மீ. மழை பெய்துள்ளது.

இவ்வாறு அவர் கூறினார்.

Tags:    

Similar News