உள்ளூர் செய்திகள்
செல்லூர் ராஜு

கச்சத்தீவு-நீட் பிரச்சினைகளுக்கு தி.மு.க. தான் காரணம்- முன்னாள் அமைச்சர் செல்லூர் ராஜூ

Published On 2022-05-27 09:35 GMT   |   Update On 2022-05-27 12:40 GMT
கச்சத்தீவு மற்றும் நீட்தேர்வு பிரச்சினைகளில் தும்பை விட்டு வாலை பிடிக்கும் கதையாக தி.மு.க. அரசியல் நாடகம் நடத்தி வருகிறது என முன்னாள் அமைச்சர் செல்லூர் ராஜூ கூறியுள்ளார்.
மதுரை:

சென்னையில் நடை பெற்ற விழாவில் பிரதமர் நரேந்திர மோடி மதுரை-போடி இடையிலான அகலப்பாதை ரெயில் திட்டத்தை நேற்று மாலை தொடங்கி வைத்தார். இதற்காக மதுரை ரெயில் நிலையத்தில் நடைபெற்ற மதுரை போடி ரெயில் தொடக்க நிகழ்ச்சியில் முன்னாள் அமைச்சர் செல்லூர் ராஜு மற்றும் அ.தி.மு.க., பாரதிய ஜனதா கட்சி பிரமுகர்கள், ரெயில்வே அதிகாரிகள் கலந்து கொண்டனர்.

பின்னர் மதுரை ரெயில் நிலையத்தில் முன்னாள் அமைச்சர் செல்லூர் ராஜூ கூறியதாவது:-

மதுரை-தேனி ரெயில் கனவு திட்டம் நிறைவேற்றப்பட்டுள்ளது. இதற்காக தென் மாவட்ட மக்கள் சார்பாக பிரதமருக்கு நன்றி தெரிவித்துக் கொள்கிறேன். தும்பை விட்டு வாலைப் பிடிப்பது போன்று தி.மு.க. ஆட்சி காலத்தில் தான் கச்சத்தீவு கொடுக்கப்பட்டது. கருணாநிதி ஆட்சியில் தான் கச்சத்தீவு தாரைவார்க்கப்பட்டது.



தற்போது அவருடைய மகன் முதல்வர் மு.க. ஸ்டாலின் பிரதமரிடம் கச்சத்தீவை மீட்க கேட்கிறார். நீட் தேர்வு குறித்து முதல்வர் மேடையில் பேசியது விளம்பரம் தேடுவதற்காகவே. ஏனென்றால் தி.மு.க. ஆதரவுடன் மத்தியில் ஆட்சி செய்த காங்கிரஸ் தான் 2010-ம் ஆண்டு நீட் தேர்வு மசோதாவை கொண்டு வந்து நிறைவேற்றியது.

அப்போதைய தி.மு.க. மத்திய அமைச்சர் காந்திசெல்வன் கையெழுத்திட்டார். இப்போது நீட்தேர்வு விவகாரம் உச்ச நீதிமன்றத்தில் உள்ளது.

எனவே கச்சத்தீவு மற்றும் நீட்தேர்வு பிரச்சினைகளில் தும்பை விட்டு வாலை பிடிக்கும் கதையாக தி.மு.க. அரசியல் நாடகம் நடத்தி வருகிறது. இந்த பிரச்சினைகளுக்கு காரணமே தி.மு.க. தான்.

வளர்ந்த மாநிலங்களிடம் இருந்து அதிக வரி வருவாய் பெற்றாலும் மத்திய அரசின் நிதி ஒதுக்கீடு குறைவாக இருக்கிறது. கூடுதல் நிதி ஒதுக்கீடு வேண்டுமென முன்னாள் முதல்வர் ஜெயலலிதா அப்போத ஆணித்தனமாக கூறினார்கள்.

தி.மு.க. ஒரு வருடத்தில் அதிகமான அறிவிப்புகளை வெளியிட்டுள்ளது.அவர்கள் அறிவித்த திட்டங்கள் பல தோல்வியடைந்து விட்டது.இவ்வாறு அவர் கூறினார்.

Tags:    

Similar News