உள்ளூர் செய்திகள்
கோப்புபடம்

போத்தனூரில் வீடு புகுந்து மாணவியை கடத்திய கல்லூரி மாணவர்

Published On 2022-05-25 09:55 GMT   |   Update On 2022-05-25 09:55 GMT
போத்தனூரை சேர்ந்த 16 வயது மாணவி. இவர் தனியார் பாலிடெக்னிக் கல்லூரியில் முதலாம் ஆண்டு படித்து வருகிறார்.
கோவை:

கோவை போத்தனூரை சேர்ந்த 16 வயது மாணவி. இவர் தனியார் பாலிடெக்னிக் கல்லூரியில் முதலாம் ஆண்டு படித்து வருகிறார்.
 
மாணவிக்கு அதே கல்லூரியில் படிக்கும் 19 வயது மாணவருடன் பழக்கம் ஏற்பட்டது. 2 பேரும் நட்பாக பழகி வந்தனர். இந்தநிலையில் மாணவியிடம் மாணவர் காதலிப்பதாக கூறினார். ஆனால் அவர் காதலிக்க மறுத்து விட்டார். இதனை யடுத்து மாணவருடன் பேசுவதையும் பழகுவதையும் தவிர்த்து வந்தார். இது மாணவருக்கு ஆத்திரத்தை ஏற்படுத்தியது.

சம்பவத்தன்று மாணவியின் பெற்றோர் வேலைக்கு சென்று இருந்தனர். மாணவி வழக்கம் போல கல்லூரிக்கு சென்று விட்டு வீட்டிற்கு திரும்பினார். 

 வீட்டில் மாணவி டி.வி. பார்த்து கொண்டு இருந்தார். அப்போது வீட்டிற்கு வந்த மாணவர், மாணவியிடம் காதலிப்பதாக கூறி அத்துமீறி உள்ளே நுழைந்தார். அவர் மாணவியை மிரட்டி கடத்தி சென்றார். 

வேலை முடிந்து வீட்டிற்கு திரும்பிய பெற்றோர் மாணவி வீட்டில் இல்லாதது கண்டு அதிர்ச்சியடைந்தனர். அக்கம் பக்கத்தினரிடம் விசாரித்த போது மாணவியை மாணவர் கடத்தி சென்றது தெரிய வந்தது. இது குறித்து மாணவியின் பெற்றோர் கிழக்கு அனைத்து மகளிர் போலீஸ் நிலையத்தில் கடத்தி செல்லப்பட்ட தங்களது மகளை மீட்டு தரும்படி புகார் செய்தனர். புகாரின் பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து காதலிக்க மறுத்த மாணவியை கடத்தி சென்ற மாணவரை தேடி வருகிறார்கள்.   

Tags:    

Similar News