உள்ளூர் செய்திகள்
ஓட்டேரியில் மாதா ஆலய தேர் ஊர்வலத்தில் கோஷ்டி மோதல்- 10 பேருக்கு அரிவாள்வெட்டு
ஓட்டேரியில் மாதா ஆலய தேர் ஊர்வலத்தில் மோதலில் ஈடுபட்டவர்கள் குறித்து அப்பகுதியில் உள்ள கண்காணிப்பு காமிரா காட்சிகளை ஆய்வு செய்து போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.
அம்பத்தூர்:
ஓட்டேரி, சத்யவானி முத்துநகரில் மாதா ஆலயம் உள்ளது. இங்கு நடைபெற்ற விழாவையொட்டி நேற்று இரவு தேர் ஊர்வலம் நடந்தது.
நள்ளிரவு ஒரு மணியளவில் தேர் ஊர்வலம் நடந்து கொண்டிருந்தபோது இரு தரப்பினருக்கும் இடையே திடீரென மோதல் ஏற்பட்டது. அவர்கள் கத்தி, அரிவாள், கற்களால் ஒருவரை ஒருவர் தாக்கிக் கொண்டனர்.
இந்த மோதலில் இருதரப்பையும் சேர்ந்த அசோக்குமார், ராஜன், அர்ஜூன், தர்மா, விக்னேஷ் உள்பட 10 பேருக்கு அரிவாள் வெட்டு விழுந்தது. மேலும் பலருக்கு லேசான காயம் ஏற்பட்டது.
இதனால் நள்ளிரவில் அப்பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.
தகவல் அறிந்ததும் தலைமைச் செயலக காலனி போலீசார் அங்கு விரைந்து சென்றனர். உடனே மோதலில் ஈடுபட்டவர்கள். அங்கிருந்து தப்பி ஓடிவிட்டனர்.
மோதலில் படுகாயம் அடைந்த 10 பேரும் கீழ்ப்பாக்கம் அரசு ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டனர். இதனால் அப்பகுதியில் தொடர்ந்து பரபரப்பான நிலை நீடித்து வருகிறது.
மீண்டும் மோதல் ஏற்படாமல் இருக்க அங்கு கூடுதல் போலீசார் அனுப்பப்பட்டு உள்ளனர். மோதலில் ஈடுபட்டவர்கள் குறித்து அப்பகுதியில் உள்ள கண்காணிப்பு காமிரா காட்சிகளை ஆய்வு செய்து போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.