உள்ளூர் செய்திகள்
அறுவடை பணியில் ஊரக திட்டப் பணியாளர்கள் - விவசாயிகள் எதிர்பார்ப்பு
நெல் மற்றும் வைக்கோலுக்கு நல்ல விலை கிடைக்கும் என்ற எதிர்பார்ப்பில் விவசாயிகள் உள்ளனர்.
உடுமலை:
உடுமலை அமராவதி அணை பாசனத்தை ஆதாரமாகக்கொண்டு கல்லாபுரம் பகுதியில் 2,500 ஏக்கருக்கும் அதிகமாக நெல் சாகுபடி செய்யப்படுகிறது. இதில் இரண்டாம் போக நெல் சாகுபடியில் அறுவடை பணிகள் துவங்கி தீவிரமடைந்துள்ளது. அறுவடை பணிகளுக்கு தொழிலாளர் பற்றாக்குறை நிலவுவதால், எந்திரங்களை கொண்டு நேரடியாக அறுவடை செய்து வருகின்றனர்.
இது குறித்து விவசாயிகள் கூறுகையில்:
நெல் அறுவடைக்கு தொழிலாளர்கள் கிடைப்பதில்லை. சீசன் சமயங்களில், தேசிய ஊரக வேலை உறுதியளிப்பு திட்ட பணியாளர்களை அறுவடை பணிகளுக்கு, பயன்படுத்திக்கொள்ள அனுமதிக்கலாம். இது குறித்து பலமுறை கோரிக்கை விடுத்தும் நடவடிக்கை இல்லை. இந்த சீசனில் நெல் மற்றும் வைக்கோலுக்கு நல்ல விலை கிடைக்கும் என்ற எதிர்பார்ப்பில் உள்ளோம் என்றனர்.