திருவள்ளூர் அருகே விபத்து- 2 வாலிபர்கள் பலி
திருவள்ளூர்:
சென்னை கொரட்டூர், முதல் பிரதான சாலையை சேர்ந்தவர் ஐயப்பன் (வயது28), தனியார் இருசக்கர வாகன ஷோரூமில் பணியாற்றி வந்தார்.
இவர் தனது நண்பரான அதே பகுதியை சேர்ந்த ஆட்டோ டிரைவரான சதீஷ் (26) என்பவருடன் இன்று அதிகாலை மோட்டார் சைக்கிளில் திருத்தணி கோவிலுக்கு சாமி கும்பிட சென்றார்.
திருவள்ளூர் அருகே தொழுவூர் சுடுகாடு வளைவில் திரும்பியபோது திருவள்ளூரில் இருந்து ஆவடி நோக்கி வந்த பால்வேன் திடீரென மோட்டார் சைக்கிள் மீது மோதியது. இதில் தூக்கிவீசப்பட்ட ஐயப்பன் பலத்த காயம் அடைந்து சம்பவ இடத்திலேயே பலியானார். அவரது நண்பர் சதீஷ் படுகாயமடைந்து உயிருக்குப் போராடிக் கொண்டிருந்தார்.
தகவல் அறிந்ததும் செவ்வாப்பேட்டை போலீசார் விரைந்து வந்தனர். அவர்கள் உயிருக்குப் போராடிக் கொண்டிருந்த சதீசை மீட்டு சிகிச்சைக்காக திருவள்ளூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
ஆனால் போகும் வழியிலேயே சதீஷ் பரிதாபமாக இறந்தார். பலியான 2 பேரின் உடல்களும் பிரேத பரிசோதனைக்காக திருவள்ளூர் அரசு ஆஸ்பத்திரியில் வைக்கப்பட்டு உள்ளது. இதுகுறித்து செவ்வாப்பேட்டை போலீஸ் இன்ஸ்பெக்டர் டில்லிபாபு வழக்கு பதிவு செய்து மேலும் விசாரித்து வருகிறார்.