உள்ளூர் செய்திகள்
மாமல்லபுரத்தில் கஞ்சா விற்பனை- பள்ளி மாணவர்களுக்கு போலீசார் அறிவுரை
மாமல்லபுரத்தில் கஞ்சாவுக்கு அடிமையான மற்றும் விற்பனையில் ஈடுபட்ட பள்ளி மாணவர்களுக்கு போலீசார் அறிவுரை கூறினர்.
மாமல்லபுரம்:
கல்பாக்கம் மாமல்லபுரம் சுற்றுவட்டார கிராமப்புற அரசுப்பள்ளி மாணவர்கள் சிலர் கஞ்சா போதைக்கு அடிமையாகி வருவதாகவும், நாளடைவில் அவர்கள் பிற மாணவர்களுக்கு வாங்கி கொடுக்கும் வியாபாரியாக மாறும் நிலை ஏற்பட்டுள்ளது. இதுபற்றி ரகசிய தகவல் செங்கல்பட்டு மாவட்ட போலீஸ் எஸ்.பி சுகுனாசிங் கவனத்திற்கு சென்றது.
இதையடுத்து அப்பகுதி பள்ளிகளை போலீசார் ரகசியமாக கண்காணித்து பள்ளி வகுப்பு ஆசிரியர் உதவியுடன், போதை மாணவர்களை கண்டுபிடித்து அவர்களுக்கு அறிவுரை கூறி, பெற்றோரின் கவனத்திற்கு கொண்டு செல்லும்படி போலீஸ் சூப்பிரண்டு சுகுனாசிங் உத்தரவிட்டார்.
இதையடுத்து மாமல்லபுரம், கல்பாக்கம், கூவத்தூர், திருக்கழுக்குன்றம், சதுரங்கபட்டினம் காவல் நிலையத்தில் போதை தடுப்புக்காக சிறப்பு பணியாக நியமிக்கப்பட்ட போலீசார் பள்ளிகளுக்கு நேரில் சென்று மாணவர்களின் நடவடிக்கை குறித்து கேட்டறிந்து அறிவுரை கூறினர்.