உள்ளூர் செய்திகள்
ஊரக வளர்ச்சித்துறை அலுவலர் மாநாடு
செம்பனார்கோயிலில் தமிழ்நாடு ஊரக வளர்ச்சித்துறை அலுவலர் சங்க மாவட்ட மாநாடு நடைபெற்றது.
தரங்கம்பாடி:
செம்பனார்கோயிலில் தமிழ்நாடு ஊரக வளர்ச்சித்துறை அலுவலர் சங்க மாவட்ட மாநாடு நடைபெற்றது. இதற்கு மாவட்ட தலைவர் நல்லமுத்து தலைமை தாங்கினார். மாநில செயலாளர் சவுந்தரபாண்டியன், மாநில பொதுச்செயலாளர் பாரி ஆகியோர் கலந்து கொண்டு சிறப்புரையாற்றினர். வளர்ச்சித் துறை சந்திக்கும் சவால்கள் குறித்து முன்னாள் மாநில பொருளாளர் நாகராஜன் கருத்துரையாற்றினார். தொடர்ந்து புதிய நிர்வாகிகள் தேர்வு செய்யப்பட்டனர்.
பின்னர் மாநில பொதுச்செயலாளர் பாரி அளித்த பேட்டியில்,
ஊரக வளர்ச்சித் துறையில் பயன்படுத்தப்படும் மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதி திட்டம், பிரதம மந்திரி வீடு கட்டும் திட்டம் மற்றும் ஜெயஜெய திட்டங்களுக்கு தமிழக அரசு உடனடியாக போதுமான ஊழியர் கட்டமைப்பு வசதிகளை ஏற்படுத்த வேண்டும்.
ஏற்கனவே ஏராளமான காலிப்பணியிடங்களால் வளர்ச்சித் துறை ஊழியர்களின் பணிச்சுமை கடுமையாக உள்ளதால் தமிழக அரசு உடனடியாக இந்தத் திட்டங்களுக்கு போதுமான ஊழியர் கட்டமைப்புகளை ஏற்படுத்த வேண்டும்.
பிரதம மந்திரி வீடுகள் திட்டத்தின் கீழ் கட்டப்படும் வீடுகளுக்கு பசுமை வீடுகள் திட்டத்தின் கீழ் கட்டப்படும் வீடுகளுக்கும் பழங்குடியினர் மக்களுக்கான வீடுகளுக்கும் மதிப்பீட்டுத் தொகை ரூ.5 லட்சமாக உயர்த்த வேண்டும்.
மயிலாடுதுறை ஒன்றியத்தில் ஒரே குறுகிய இடத்தில் இரண்டு நபர்களுக்கு வருவாய் துறையினர் இரண்டு பட்டாக்கள் வழங்கி முறைகேடுகள் நடைபெற்றுள்ளதால் வீடு கட்டி கொடுப்பதில் தொய்வு அடைந்துள்ளது. ஒருவருக்கு ஒரு வீடு தான் வழங்கவேண்டும்.
எனவே இந்த வீடுகள் கட்டும் திட்டத்திற்கான மதிப்பீட்டினை உயர்த்திதர வேண்டும். அனைத்து ஊராட்சிகளுக்கும் மானியத்தை உடனடியாக மாநில நிதிக்குழு விடுவிக்க வேண்டும் என்றார்.
இதையடுத்து கூட்டத்தில், தமிழ்நாடு ஊரக வளர்ச்சித்துறை அலுவலர் சங்கத்தின் முன்னாள் மாநிலத் தலைவர் சுப்ரமணியன் பணிநீக்கம் செய்யப்பட்டதை உடனடியாக ரத்து செய்து அவரை பணி ஓய்வில் செல்ல அனுமதிக்க வேண்டும் என்று தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டது.