உள்ளூர் செய்திகள்
கோப்புப்படம்

நெல்லை அருகே மொபட்டில் சென்ற இளம்பெண்ணிடம் நகை-செல்போன் பறித்த 4 வாலிபர்கள் கைது

Published On 2022-04-30 15:10 IST   |   Update On 2022-04-30 15:10:00 IST
நெல்லை அருகே மொபட்டில் சென்ற இளம்பெண்ணிடம் நகை மற்றும் செல்போன் பறித்த 4 வாலிபர்களை போலீசார் கைது செய்தனர்.
நெல்லை:

நெல்லையை அடுத்த தாழையூத்து அருகே உள்ள தென்கலம் புதூர் காலனி தெருவை சேர்ந்தவர் மாரியப்பன். இவரது மகள் கலையரசி(வயது 25). இவர் நேற்று நெல்லை அரசு மருத்துவமனையில் இருந்து தனது நண்பர் ஒருவரை மொபட்டில் அழைத்துக்கொண்டு ஊருக்கு சென்றுள்ளார்.
நான்குவழிச்சாலையில் சென்ற அவர்கள் நாரணம்மாள்புரம் ஆற்றுப்பகுதியில் உள்ள பாலத்திற்கு அருகே சாய்பாபா கோவில் அருகே சென்றபோது அங்கு நின்று கொண்டிருந்த 4 பேர் கும்பல் அவரை வழிமறித்தது.

அந்த கும்பல் அவர்களை மிரட்டி, கலையரசியிடம் இருந்த 2 பவுன் நகை, செல்போன் உள்ளிட்டவற்றை பறித்துவிட்டு அங்கிருந்து தப்பி சென்றுவிட்டனர். இதுதொடர்பாக கலையரசி அளித்த புகாரின்பேரில் தாழையூத்து போலீசார் வழக்குப்பதிவு செய்து 4 பேர் கும்பல் குறித்து விசாரணை நடத்தினர்.  

இந்த சம்பவத்தில் ஈடுபட்ட தாழையூத்தை சேர்ந்த மணிகண்டன்(25), சீவலப்பேரியை சேர்ந்த வளதி(23), குறிச்சிகுளத்தை சேர்ந்த முத்துசெல்வம்(22), ராஜவல்லிபுரத்தை சேர்ந்த அஞ்சல் வளதி ஆகியோரை போலீசார் கைது செய்தனர். அவர்களிடம் இருந்து நகை மற்றும் செல்போனை மீட்டனர்.

Similar News