உள்ளூர் செய்திகள்
கடம்பூர் வனப்பகுதியில் நாட்டு துப்பாக்கியுடன் சுற்றிய 3 பேர் கைது
சத்தியமங்கலம் கடம்பூர் வனப்பகுதியில் நாட்டு துப்பாக்கியுடன் சுற்றிய 3 பேரை போலீசார் கைது செய்துள்ளனர்.
ஈரோடு:
சத்தியமங்கலம் கடம்பூர் வனப்பகுதியில் நாட்டு துப்பாக்கியுடன் சுற்றிய 3 பேரை போலீசார் கைது செய்துள்ளனர்.
கடம்பூர் சப்-இன்ஸ்பெக்டர் சிவக்குமார் தலைமையிலான போலீசார் கடம்பூர் வனப்பகுதியான கல்கடம்பூர், நடுர் மற்றும் மல்லியம்மன் தூர்க்கம் செல்லும் வழியில் ரோந்து பணியில் ஈடுபட்டுக்கொண்டிருந்தனர்.
அப்போது அந்த வழியாக 3 நபர்கள் வெள்ளை பையுடன் சென்று கொண்டிருந்தனர். போலீசை பார்த்ததும் அவர்கள் தப்பி ஓட முயன்றனர். அந்த கும்பலை போலீசார் மடக்கிப் பிடித்து விசாரணை நடத்தினர்.
விசாரணையில் அவர்கள் கடம்பூர் பகுதியை சேர்ந்த மூர்த்தி (வயது 36), சுப்ரமணி (44), சதீஷ் (24) ஆகியோர் என தெரியவந்தது. அவர்கள் வைத்திருந்த பையை சோதனை செய்தபோது அதில் 3 நாட்டு துப்பாக்கிகள் இருந்தது தெரியவந்தது.
இது குறித்து அவர்களிடம் கேட்டபோது வனவிலங்குகளை வேட்டையாட வைத்து இருந்ததாக கூறினர். இதுகுறித்து கடம்பூர் போலீசார் வழக்கு பதிவு செய்து 3 பேரையும் கைது செய்து அவர்களிடமிருந்து 3 நாட்டுத்துப்பாக்கியை பறிமுதல் செய்தனர்.