ஈரோட்டில் காதலனுடன் மகள் சென்றதால் பெண் தூக்குப்போட்டு தற்கொலை
ஈரோடு:
ஈரோடு சூரம்பட்டி, சங்கு நகர் பகுதியை சேர்ந்தவர் சுமதி (வயது 40). இவரது கணவர் முருகேசன். இவர்களுக்கு 23 வயதில் ஒரு மகளும், 17 வயதில் ஒரு மகனும் உள்ளனர்.
இந்நிலையில் சுமதி,முருகேசனுக்கு இடையே கருத்து வேறுபாடு ஏற்பட்டதன் காரணமாக கடந்த 5 வருடங்களாக சுமதி கணவரை பிரிந்து தாய் வீட்டில் மகன், மகளுடன் வசித்து வந்தார். அவ்வப்போது முருகேசன் தனது மகள் மற்றும் மகனைப் பார்த்து சென்று வந்தார்.
சுமதியின் மகள் ஒருவரை காதலித்து வந்ததாக கூறப்படுகிறது. இந்நிலையில் நேற்று முன்தினம் சுமதியின் மகள் தான் காதலிக்கும் வாலிபருடன் வீட்டை விட்டு சென்று விட்டார். இதுகுறித்து சுமதி சூரம்பட்டி போலீசில் புகார் செய்தார். இந்நிலையில் சுமதிக்கு அவரது மகள் போன் செய்து தான் மீண்டும் வந்துவிடுவதாக கூறினார்.
பின்னர் சுமதி வீட்டுக்கு வந்து சோகத்துடன் இருந்துள்ளார். தன்னுடைய கணவரும் தன்னுடன் இல்லை. மகளும் காதலுடன் சென்றுவிட்டாளே என்ற வேதனையில் தற்கொலை செய்ய முடிவு எடுத்து வீட்டில் திடீரென தூக்குப்போட்டு கொண்டார்.
உடனடியாக அவரை மீட்டு சிகிச்சைக்காக ஈரோடு அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். அவரை பரிசோதித்த டாக்டர்கள் வரும் வழியிலேயே சுமதி இறந்துவிட்டதாக தெரிவித்தனர்.
இதுகுறித்து சூரம்பட்டி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.