திருவள்ளூர் அருகே நாய் குறுக்கே வந்ததால் மோட்டார் சைக்கிளில் இருந்து தவறி விழுந்தவர் பலி
திருவள்ளூர்:
திருவள்ளூரை அடுத்த அதிகத்தூர் கிராமம் இந்திரா நகரை சேர்ந்தவர் குணசேகர் (29). தனியார் தொழிற்சாலை ஒப்பந்த தொழிலாளி. இவர் கடந்த 19ம் தேதி அதே பகுதியை சேர்ந்த தனது உறவினர் மகன் முகேஷ் (7) என்பவரை அழைத்துக்கொண்டு திருவள்ளூர் சென்றார்.
பின்னர் 2 பேரும் மோட்டார் சைக்கிளில் வீடு நோக்கி வந்து கொண்டு இருந்தனர். தண்டலம் அருகே வரும்போது திடீரென சாலையின் குறுக்கே நாய் வந்தது. இதனால் மோட்டார் சைக்கிளில் இருந்து நிலைதடுமாறிய 2 பேரும் கீழே விழுந்தனர்.
இதில் குணசேகருக்கு தலை மற்றும் உடலில் பலத்த காயம் ஏற்பட்டது. சிறுவனுக்கு லேசான காயம் ஏற்பட்டது. அந்த வழியாக வந்த பொதுமக்கள் விபத்தில் காயமடைந்தவர்களை மீட்டு சிகிச்சைக்காக திருவள்ளூர் மாவட்ட அரசு தலைமை மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
பின்னர் மருத்துவர்கள் மேல்சிகிச்சைக்காக குணசேகரை சென்னை மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அங்கு சிகிச்சை பெற்று வந்த அவர் சிகிச்சை பலனில்லாமல் பரிதாபமாக இறந்து போனார்.
இதுகுறித்து கடம்பத்தூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றன.