உள்ளூர் செய்திகள்
பறிமுதல் செய்யப்பட்ட தனியார் பஸ்.

குடியாத்தத்தில் படிக்கட்டில் ஆபத்தான பயணம் செய்ய அனுமதித்ததால் தனியார் பஸ் பறிமுதல்

Published On 2022-04-20 16:24 IST   |   Update On 2022-04-20 16:24:00 IST
குடியாத்தத்தில் படிக்கட்டில் ஆபத்தான பயணம் செய்ய அனுமதித்ததால் தனியார் பஸ் பறிமுதல் செய்யப்பட்டது.
குடியாத்தம்:

வேலூர் மாவட்டம் குடியாத்தத்தில் இருந்து ஆற்காடு ராணிப்பேட்டை செல்லும் தனியார் பஸ்சில் நேற்றுமுன்தினம் படிக்கட்டில் ஆபத்தான முறையில் பயணிகள் பயணம் செய்ததும் மேலும் பஸ்ஸின் பின்புறம் தொங்கியபடி பயணிகள் சென்றது குறித்து சமூக வலைதளங்களில் படங்கள் வைரலானது.

இதனை தொடர்ந்து அந்த தனியார் பஸ் மீது நடவடிக்கை எடுக்குமாறு வேலூர் கலெக்டர் குமாரவேல் பாண்டியன்,  போலீஸ் சூப்பிரண்டு ராஜேஷ்-கண்ணன், வேலூர் துணை போக்குவரத்து ஆணையர் இளங்கோவன், வேலூர் வட்டார போக்குவரத்து அலுவலர் செந்தில்வேலன் ஆகியோர் போக்குவரத்துத் துறைக்கும் காவல்துறைக்கும் உத்தரவிட்டனர்.

இதனை தொடர்ந்து குடியாத்தம் மோட்டார் வாகன ஆய்வாளர் ராஜேஷ்கண்ணா, குடியாத்தம் டவுன் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் சிலம்பரசன் உள்ளிட்ட போலீசார் அந்த தனியார் பஸ்சை குடியாத்தம் பஸ்  நிலையத்தில் வைத்து பறிமுதல் செய்தனர்.

மேலும் அந்த பஸ் டிரைவர், கண்டக்டர் மற்றும் பஸ் நிலையத்தில் இருந்த அரசு மற்றும் தனியார் பஸ் டிரைவர் மற்றும் கண்டக்டரிடம் பஸ்சின் படிக்கட்டில் தொங்கியபடி பயணிகளை ஏற்றக்கூடாது.

மேலும் பஸ்சின் பின்பகுதியில் தொங்கியபடி பயணிகளை ஏற்றக் கூடாது அப்படி ஏற்றிச் செல்லும் பஸ்கள் பறிமுதல் செய்யப்படும், ஓட்டுநர் கண்டக்டர் மீது கடுமையாக நடவடிக்கை எடுக்கப்படும் என அவர்களுக்கு போலீசாரும், போக்குவரத்து அதிகாரி-களும் அறிவுறுத்தினர்.

பறிமுதல் செய்யப்பட்ட தனியார் பஸ் மீது மோட்டார் வாகன சட்டப்படி வழக்குப் பதிவு செய்யப்பட்டு குடியாத்தம் டவுன் போலீசில் ஒப்படைக்-கப்பட்டது. 

தனியார் பஸ் பறிமுதல் செய்யப்பட்ட சம்பவம் குடியாத்தம் பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

குடியாத்தம் நகரில் இருந்து பல்வேறு கிராமப்புற பகுதிகளுக்கு பள்ளி விடும் சமயங்களில் செல்லும் பஸ்களில் தொடர்ந்து மாணவர்கள் மற்றும் இளைஞர்கள் படிக்கட்டில் ஆபத்தான முறையில் தொங்கியபடி செல்வது வாடிக்கையாக உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது அதிகாரிகள் அசம்பாவிதம் ஏற்படும் முன் கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும் என சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்து வருகின்றனர்.

Similar News