தி.மு.க அரசு ஆன்மிக அரசாக திகழ்ந்து வருகிறது- சட்டசபையில் அமைச்சர் பி.கே.சேகர்பாபு பேச்சு
சென்னை:
தமிழக சட்டசபையில் இன்று கேள்வி நேரத்தின் போது ஆலங்குளம் தொகுதி எம்.எல்.ஏ மனோஜ்பாண்டியன் கீழக்கடையம் பத்ரகாளி அம்மன் கோவிலில் அன்னதான கூடம் அமைக்கப்படுமா? கடந்த ஜெயலலிதா ஆட்சியின் போது கொண்டு வரப்பட்ட அன்னதான திட்டத்தில் தரமான உணவு வழங்கப்படுமா என கேள்வி எழுப்பினார்.
இதற்கு பதில் அளித்து இந்து சமய அறநிலையதுறை அமைச்சர் பி.கே. சேகர்பாபு பேசியதாவது:-
கீழக்கடையம் பத்ர காளியம்மன் கோவிலில் இந்த ஆண்டு அன்னதான கூடம் அமைக்கப்படும்.இந்த கோவிலில்2008-ஆம் ஆண்டுக்கு பிறகு கும்பாபிஷேகம் நடைபெறாமல் உள்ளது. இந்த ஆண்டு கும்பாபிஷேகம் நடத்த நடவடிக்கை எடுக்கபடும்.
அன்னதான திட்டத்தை பொறுத்தவரை அதனை யார் கொண்டு வந்தார்கள் என்பதை விட அதனை யார் சிறப்பாக செயல்படுத்துகிறார்கள் என்பதுதான் முக்கியம்.
அன்னதான திட்டத்தை தமிழக அரசு சிறப்பாக செயல்படுத்தி வருகிறது. தரமான உணவுகள் வழங்கப்படுகிறது. அன்னதான திட்டத்தின் கீழ் தமிழக கோவில்களில் .சுமார் 75 ஆயிரம் பக்தர்கள் உணவு சாப்பிடுகிறார்கள்.
341 கோவில்கள் உணவுதர சான்றிதழ் பெற்று உள்ளது. அந்த அளவுக்கு சிறப்பாக அன்னதான திட்டம் செயல்பட்டு வருகிறது. இதன் மூலம் பக்தி பசியையும், வயிற்று பசியையும். போக்கும் முதல்வராக நமது முதல் -அமைச்சர் திகழ்ந்து வருகிறார். தி.மு.க. அரசு சிறந்த ஆன்மிக அரசாக திகழ்நது வருகிறது.
தமிழகத்தில் 666 கோவில்களில் ரூ 844 கோடி செலவில் திருப்பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது.
இவ்வாறு அவர் பேசினார்.
இதையும் படியுங்கள்... தென்மாவட்டங்களில் இன்று கனமழைக்கு வாய்ப்பு- வானிலை ஆய்வு மையம் தகவல்