உள்ளூர் செய்திகள்
கொள்ளை நடந்த வீடு.

கல்லூரி பேராசிரியர்கள் வீட்டில் நகை கொள்ளை

Published On 2022-04-18 15:01 IST   |   Update On 2022-04-18 15:01:00 IST
கல்லூரி பேராசிரியர்கள் வீட்டில் நகை கொள்ளையடிக்கப்பட்டது.
புதுச்சேரி:

நெல்லித்தோப்பில் கல்லூரி பேராசிரியர்கள் வீட்டில் 20 பவுன் நகையை மர்ம நபர்கள் கொள்ளையடித்து சென்று விட்டனர். புதுவை நெல்லித்தோப்பு மடத்து வீதியை சேர்ந்தவர் மோகன செல்வம் (வயது 47). இவர் மூலகுளத்தில் உள்ள தனியார் கல்லூரியில் பேராசிரியராக பணிபுரிந்து வருகிறார். இவரது மனைவி பூரணி. இவரும் தமிழக பகுதியில் உள்ள ஒரு தனியார் கல்லூரியில் பேராசிரியையாக பணியாற்றி வருகிறார். இவர்களுக்கு 2 குழந்தைகள் உள்ளனர். அவர்கள் புதுவையில் உள்ள ஒரு தனியார் பள்ளியில் படித்து வருகிறார்கள். 

தினமும் காலையில் குழந்தைகளை பள்ளிக்கு அனுப்பிவிட்டு கணவன்-மனைவி இருவரும் கல்லூரிக்கு பணிக்கு செல்வது வழக்கம். அதற்கு முன்பாக வீட்டு சாவியை வீட்டின் மாடியில் வாடகைக்கு வசித்து வருபவரிடமும் சில சமயங்களில் பக்கத்து வீட்டுக்காரரிடமும் கொடுத்து செல்வது வழக்கம். 

அதுபோல் சம்பவத்தன்று காலை குழந்தைகளை பள்ளிக்கு அனுப்பிவிட்டு கணவன்-மனைவி இருவரும் பணிக்கு சென்றனர். பின்னர் மாலையில் பணிமுடிந்து வீட்டுக்கு வந்தபோது பீரோவில் இருந்த பொருட்கள் சிதறிக்கிடந்ததை கண்டு அதிர்ச்சி அடைந்தனர். பீரோவில் வைத்திருந்த 20 பவுன் நகை மாயமாகியிருந்தது. வீட்டு கதவு எதுவும் உடைக்கப்படவில்லை. யாரோ வீட்டை திறந்து பீரோவில் இருந்த நகையை கொள்ளையடித்து சென்று-ள்ளனர். இதன் மொத்த மதிப்பு ரூ.7 லட்சம் ஆகும்.

இதுகுறித்து மோகனசெல்வம் உருளையன்பேட்டை போலீசில் புகார் செய்தார். புகாரின் பேரில் போலீஸ் இன்ஸ்பெக்டர் பாபுஜி மற்றும் போலீசார் சம்பவ இடத்துக்கு சென்று விசாரணை நடத்தினர். வீட்டுக்கதவு உடைக்கப்படாததால் நன்கு அறிமுகமான நபர்களே இந்த கொள்ளை சம்பவத்தில் ஈடுபட்டு இருக்கலாம் என போலீசார் கருதுகிறார்கள். இதையடுத்து வீட்டின் மாடியில் வசிப்பவர்கள் மற்றும் பக்கத்து வீட்டை சேர்ந்தவர்களிடமும் போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகிறார்கள். மேலும் வீட்டுவேலை செய்யும் பெண் மற்றும் ஏசி பழுதுபார்க்கும் மெக்கானிக் ஆகியோரிடமும் போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்

Similar News