உள்ளூர் செய்திகள்
இரட்டிப்பு பணம் தருவதாக கூறி 16 பேரிடம் ரூ. 70 லட்சம்- 88 பவுன் நகை மோசடி
காரைக்கால் அருகே இரட்டிப்பு பணம் தருவதாக கூறி 16 பேரிடம் ரூ.70 லட்சம் மற்றும் 88 பவுன் நகை மோசடி செய்யப்பட்டது தொடர்பாக போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
காரைக்கால்:
காரைக்கால் உமறுபுலவர் வீதியைச் சேர்ந்தவர் மொய்தீன் அப்துல்காதர்(வயது46). இவர் தனது நண்பர் நாகூரைச்சேர்ந்த அப்துல்ரகுமான்(45) அவரது மனைவி ராஜாத்தி ஆயிஷா நாச்சியாள்(40) ஆகிய 3 பேரும் சேர்ந்து, ரியல் எஸ்டேட்டில் இரட்டிப்பு பணம் கிடைக்கும் என, கடந்த சில மாதங்களாக பலரை ஏமாற்றி பணம் பறித்து வந்துள்ளனர். யாரும் புகார் தராத நிலையில், மூவரும் மேலும் பலரை ஏமாற்றிவந்துள்ளனர்.
இந்நிலையில், காரைக்கால் காஜியார் வீதியைச் சேர்ந்த முகமது ஆரிப் மனைவி கமருன்நிசா என்பவர், காரைக்கால் டவுன் போலீஸ் நிலையத்தில் ஒரு புகார் கொடுத்தார். அதில், எனது தலைமையில் 9 பேரிடம் ரூ. 5 லட்சம் பணம், 72 பவுன் தங்க நகையை, மேற்கண்ட 3 பேரும் கூறிய ஆசைவார்த்தைகளை நம்பி கொடுத்து பல மாதங்கள் ஆகியும், லாபமாக பணமோ, நிலமோ எதையும் தரவில்லை. கேட்கும் போதெல்லாம் அடுத்த மாதம் என சொல்லிவந்தவர்கள், கடந்த சில நாட்களாக ஒன்றும் தர முடியாது.
உன்னால் என்ன செய்ய முடியுமோ செய்துகொள் என கூறி, தகாத வார்த்தைகளால் திட்டுகின்றனர். என்னை நம்பி பணம் கொடுத்தவர்கள் என்னிடம் கேட்பதால், நான் பதில் சொல்ல முடியாமல் இருக்கிறேன். அதனால், எனது தலைமையில் கொடுக்கப்பட்ட பணம் ரூ.55 லட்சம், 72 பவுன் தங்க நகையை மீட்டு, 3 பேர் மீது தக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.
இவ்வாறு அவர் கூறி இருந்தார். அதேபோல், காரைக்கால் மாமாதம்பி மரைக்காயர் வீதியைச் சேர்ந்த ஜெகாபர்சாதிக் மனைவி ஜனாத்துல் பர்லீன், காரைக்கால் டவுன் போலீஸ் நிலையத்தில் கொடுத்த புகாரில், மேற்கண்ட 3 பேரின் ஆசைவார்த்தைகளை நம்பி, எனது தலைமையில், 5 பேரிடம், ரூ.15 லட்சம் பணம், 16 பவுன் தங்க நகையை கொடுத்து ஏமாந்துள்ளேன். பணம் மற்றும் நகையை கேட்டால் அசிங்கமாக திட்டி விரட்டி விடுகின்றனர்.
எனவே, நான் கொடுத்த ரூ.15 லட்சம் பணம், 16 பவுன் தங்க நகையை மீட்டு தருவதுடன், சம்பந்தப்பட்ட 3 பேர் மீது உரிய நடவடிக்கை எடுக்கவேண்டும் என குறிப்பிட்டுள்ளார்.
இது குறித்து, காரைக்கால் நகர காவல்நிலைய இன்ஸ்பெக்டர் பாலமுருகன் மற்றும் போலீசார் வழக்கு பதிவு செய்து தலைமறைவாக உள்ள 3 பேரையும் தேடிவ ருகின்றனர்.
மேலும் மேற்கண்ட 3 பேர் வேறு யார் யாரை ஏமாற்றியுள்ளனர் என்பது குறித்தும், போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். இச்சம்பவம் காரைக்காலில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.