உள்ளூர் செய்திகள்
புதுச்சேரி மக்களுக்காக பாராளுமன்றத்தில் எம்.பி.க்கள் குரல் கொடுக்க வேண்டும்- மு.க.ஸ்டாலினிடம் தி.மு.க.வினர் மனு
புதுவை மக்களுக்காக பாராளுமன்றத்தில் எம்.பி.க்கள் குரல் கொடுக்க வேண்டும் என்று டெல்லியில் மு.க.ஸ்டாலினிடம் புதுவை தி.மு.க.வினர் மனு அளித்தனர்.
புதுச்சேரி:
புதுவை மாநில சட்டசபை எதிர்கட்சித் தலைவர் .சிவா தலைமையில், தி.மு.க. அவைத் தலைவர் எஸ்.பி.சிவக்குமார், எம்.எல்.ஏ.க்கள் நாஜிம், அனிபால் கென்னடி, சம்பத், செந்தில்குமார், நாகதியாகராஜன், துணை அமைப்பாளர் சண்.குமாரவேல், தொகுதி பொறுப்பாளர் கார்த்திகேயன் ஆகியோர் டெல்லியில் தமிழக முதல்-அமைச்சர் ஸ்டாலின் மற்றும் தி.மு.க பாராளு மன்றக்குழு உறுப்பினர் களை சந்தித்து அளித்த மனுவில் கூறியிருப்பதாவது:-
புதுவை நிதி மற்றும் நிர்வாக சுதந்திரம் இல்லாத யூனியன் பிரதேசமாக நீடிக்கிறது. மாநில அந்தஸ்து இல்லாதாதல் மத்திய அரசின் நிதிக்குழுவில் புதுவை சேர்க்கப்படாமல் உள்ளது. சட்டசபை இருப்பதால் யூனியன் பிரதேசங்களை போல வரிச்சலுகையும் தருவதில்லை.
மத்திய அரசு கடனை தள்ளுபடி செய்யாமலேயே தனி கணக்கு தொடங்கியதால் புதுவையின் கடன் ரூ.10 ஆயிரம் கோடியாக உள்ளது. மாநிலத்தில் தேர்வாணையம் இல்லாததால் பணியிடங்களை நிரப்புவதில் சிக்கல் நீடிக்கிறது.
மத்திய நிதிக்குழுவில் புதுவையை சேர்க்க வேண்டும். மாநில அந்தஸ்து மட்டுமே புதுவையின் வளர்ச்சிக்கு ஒரே தீர்வாக இருப்பதால் அதற்கு தி.மு.க. குரல் கொடுக்க வேண்டும்.
புதுவையில் உள்ள பொதுத்துறை நிறுவனங் களையும், பஞ்சாலை களையும் புனரமைக்கும் பொருட்டு மத்திய அரசு கூடுதல் நிதியினை வழங்க வேண்டும்.
இடஒதுக்கீடுடன் உள்ளாட்சி தேர்தலை நடத்த வழி செய்ய வேண்டும். இந்த கோரிக்கைகளை தி.மு.க.வின் மக்களவை, மாநிலங்களவை உறுப்பினர்கள் பாராளுமன்ற அவைகளில் புதுவை மக்களுக்காக குரல் கொடுக்க வேண்டும்.
இவ்வாறு அவர்கள் குறிப்பிட்டுள்ளனர்.