உள்ளூர் செய்திகள்
கைது

பாலியல் தொல்லையால் மாணவி தற்கொலை முயற்சி- ஆசிரியர் கைது

Published On 2022-03-27 05:51 GMT   |   Update On 2022-03-27 05:51 GMT
காட்பாடி அருகே மாணவிக்கு பாலியல் தொல்லை கொடுத்த ஆசிரியரை போக்சோ சட்டத்தில் வழக்கு பதிவு செய்து போலீசார் கைது செய்தனர்.
வேலூர்:

வேலூர் மாவட்டம் காட்பாடி அடுத்த திருவலத்தில் அரசு பெண்கள் மேல்நிலைப் பள்ளி உள்ளது. இந்த பள்ளியில் ஆங்கில ஆசிரியராக முரளி கிருஷ்ணன் என்பவர் 9 ஆண்டுகளாக பணியாற்றி வருகிறார்.

திருவலம் அடுத்த ஒரு கிராமத்தை சேர்ந்த 13 வயது மாணவி ஒருவர் 7-ம் வகுப்பு படித்து வருகிறார். முரளிகிருஷ்ணன் கடந்த சில நாட்களாக மாணவியிடம் சில்மி‌ஷத்தில் ஈடுபட்டு வந்ததாக கூறப்படுகிறது.

அந்த மாணவியிடம் தனது வீட்டுக்கு வருமாறு துண்டு சீட்டில் தனது விலாசத்தை எழுதி கொடுத்துள்ளார். இதுகுறித்து யாரிடமும் தெரிவிக்காமல் மன உளைச்சலில் மாணவி இருந்தார்.

இதனை கண்டு கொள்ளாத மாணவி வழக்கம்போல் பள்ளிக்கு வந்தார். அப்போது முரளி கிருஷ்ணன் மாணவியிடம் பாலியல் தொல்லையில் ஈடுபட்டு மீண்டும் தனது வீட்டுக்கு வருமாறு வற்புறுத்தியுள்ளார். இதனால் அதிர்ச்சி அடைந்த மாணவி பள்ளியிலேயே மயக்கம் போட்டு விழுந்துள்ளார்.

இதுகுறித்து மற்ற ஆசிரியர்கள் அந்த மாணவியின் பெற்றோருக்கு தகவல் தெரிவித்தனர். அவர்கள் மாணவியை வீட்டிற்கு அழைத்து வந்தனர்.

இந்த நிலையில் நேற்று காலை மாணவி தனக்கு உடல்நிலை சரியில்லை எனவும் பள்ளிக்கு செல்ல மாட்டேன் என பெற்றோரிடம் கூறினார்.

இதனால் மன உளைச்சலில் இருந்த மாணவி திடீரென வீட்டில் இருந்த மர பொருட்களுக்கு பயன்படுத்தும் வார்னீசை குடித்து மயங்கினார். இதனை பார்த்து அதிர்ச்சியடைந்த பெற்றோர் மாணவியை மீட்டு வேலூர் அடுக்கம்பாறை மருத்துவமனையில் அனுமதித்தனர். அங்கு மாணவிக்கு தீவிரமாக சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

இதுகுறித்து தகவல் அறிந்த திருவலம் போலீசார் மருத்துவமனைக்கு சென்று விசாரித்தனர்.

இதனையடுத்து போலீசார் முரளிகிருஷ்ணனை திருவலம் போலீஸ் நிலையத்துக்கு அழைத்து வந்து விசாரணை நடத்தினர். பின்னர் போக்சோ சட்டத்தில் வழக்கு பதிவு செய்து அவரை கைது செய்தனர்.

ஆசிரியர் வேறு எந்த மாணவிகளிடமும் இதுபோன்று பாலியல் தொல்லை கொடுத்துள்ளாரா என விசாரணை நடத்தி வருகின்றனர்.

இதற்கிடையே நேற்று இரவு மாணவியின் பெற்றோர் மற்றும் உறவினர்கள் திருவலம் போலீஸ் நிலையத்துக்குச் சென்று முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்டனர்.

அப்போது சம்பந்தப்பட்ட ஆசிரியர் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று வலியுறுத்தினர்.
Tags:    

Similar News