உள்ளூர் செய்திகள்
மருந்துக்கடைகளில் டாக்டர் மருந்து சீட்டு இல்லாமல் மருந்துகள் விற்பனை செய்ய கூடாது- போலீஸ் சூப்பிரண்டு எச்சரிக்கை
மருந்துக்கடைகளில் டாக்டர் மருந்து சீட்டு இல்லாமல் மருந்துகள் விற்பனை செய்ய கூடாது என போலீஸ் சூப்பிரண்டு பவன் குமார் எச்சரித்துள்ளார்.
திருவண்ணாமலை:
திருவண்ணாமலை மாவட்டத்தில் போதைப் பொருட்களை அடியோடு ஒழிக்கும் நோக்கத்தில் திருவண்ணாமலை மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு பவன் குமார் தலைமையில் போலீசார் பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றனர்.
இதன் ஒரு பகுதியாக கடந்த 19-ந் தேதி திருவண்ணாமலை கிரிவலம் பாதையில் 5 கிலோ மீட்டருக்கு மினி மாரத்தான் போட்டி நடைபெற்றது.
பின்னர் கடந்த 22-ந் தேதி மாவட்டத்தில் உள்ள பள்ளிகளின் தலைமை ஆசிரியர்களிடம் திருவண்ணாமலை மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு அலுவலக கலந்தாய்வு கூடத்தில் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு போதைப் பொருள் குறித்த விழிப்புணர்வை மாணவ &மாணவிகளிடம் ஏற்படுத்த வேண்டும் என்று அறிவுறுத்தினார்.
இதனை தொடர்ந்து நேற்று (24&ந் தேதி) போலீஸ் சூப்பிரண்டு பவன் குமார் தலைமையில் நடைபெற்ற கலந்தாய்வு கூட்டத்தில் மருந்தக உரிமையாளர்கள் மற்றும் விற்பனையாளர்கள் கலந்து கொண்டனர்.
இக்கூட்டத்தில் மருத்துவரின் பரிந்துரை சீட்டு இல்லாமல் யாருக்கும் மருந்துகளை வழங்க கூடாது என்றும், தனிப்பட்ட நபர்களுக்கு மொத்த விற்பனையில் மருந்துகளை வழங்க கூடாது என்றும், அங்கீகரிக்கப்படாத மருந்துகள் மற்றும் தடைசெய்யப்பட்ட போதை மருந்துகளை விற்பனை செய்யக்கூடாது என்றும், இதனை மீறுபவர்கள் மீது சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் எடுத்துரைத்தார்.
அப்போது திருவண்ணாமலை கிராமிய காவல் உட்கோட்ட டி.எஸ்.பி. அண்ணாதுரை மற்றும் சுகாதார துறை ஆய்வாளர் கோகிலா உள்ளிட்டவர்கள் உடனிருந்தனர்.