உள்ளூர் செய்திகள்
கோப்புப்படம்

திருவண்ணாமலையில் நகைக்காக மூதாட்டியை கொலை செய்த 3 சிறுவர்கள் கைது

Published On 2022-03-07 15:02 IST   |   Update On 2022-03-07 15:02:00 IST
திருவண்ணாமலை அருகே நகைக்காக மூதாட்டியை கொலை செய்த 3 சிறுவர்களை போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
திருவண்ணாமலை:

திருவண்ணாமலை மாவட்டம் மங்கலம் அருகே உள்ள ஆரம்பாக்கம் கிராமத்தை சேர்ந்தவர் சுசீலா (வயது 70). இவரது கணவர் பொன்னுசாமி இறந்துவிட்டார்.இவருக்கு ஒரு மகன் உள்ளார்.

மகனுக்கு திருமணம் முடிந்து குடும்பத்துடன் தனியாக வசித்து வருகிறார். மூதாட்டி பிள்ளையார் கோவில் தெருவில் வசித்து வந்தார் இந்த நிலையில் நேற்று முன்தினம் ஓடை பகுதியில் விறகு வெட்ட சென்ற சுசிலா அடித்து கொலை செய்யப்பட்டு கிடந்தார். அவர் காதில் அணிந்திருந்த தங்க கம்மல் காணாமல் போய் இருந்தது. 

இது குறித்து தகவல் அறிந்த மங்கலம் போலீசார் சுசிலா பிணத்தை மீட்டு பிரேத பரிசோதனைக்காக திருவண்ணாமலை அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.

இதுகுறித்து சுசிலாவின் மகன் ஏழுமலை அளித்த புகாரின் பேரில் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வந்தனர். 

விசாரணையில் அதே பகுதியை சேர்ந்த 17 வயதுடைய 3 சிறுவர்கள் மூதாட்டி காதில் அணிந்திருந்த கம்மல் திருட திட்டம் தீட்டி ஆட்கள் நடமாட்டம் இல்லாததை அறிந்து மூதாட்டியை கட்டையால் தலையில் தாக்கி கொலை செய்துவிட்டு மூதாட்டி காதில் அணிந்திருந்த  கம்மலை திருடிச் சென்றது தெரியவந்தது.

இதில் ஒரு சிறுவன் பிளஸ்&2, மற்றொரு சிறுவன் பாலிடெக்னிக் கல்லூரியில் படித்து வருகிறன்றனர். மேலும் ஒரு சிறுவன் 10-ம் வகுப்பு வரை படித்துள்ளார். 

போலீசார் 3 சிறுவர்களையும் கைது செய்து கடலூர் சிறுவர் சீர்திருத்த பள்ளியில் அடைத்தனர்.திருவண்ணாமலை அருகே  நகைக்காக சிறுவர்கள் மூதாட்டியை கட்டையால் அடித்து கொலை செய்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

Similar News