உள்ளூர் செய்திகள்
திருவண்ணாமலை அருகே ஓடையில் மூதாட்டி மர்ம சாவு
திருவண்ணாமலை அருகே ஓடையில் மூதாட்டி மர்மமான முறையில் இறந்து கிடந்தார்.
திருவண்ணாமலை:
திருவண்ணாமலை அடுத்த மங்கலம் அருகே ஆர்ப்பாக்கம் கிராமத்தைச் சேர்ந்தவர் சுசீலா (வயது 70). இவரது கணவர் சில வருடங்களுக்கு முன்பு இறந்துவிட்டார். இவர்களுக்கு ஒரு மகன் உள்ளார். அவருக்கு திருமணமாகி தனியாக வசித்து வருகிறார்.
இந்த நிலையில் சுசீலா அருகே உள்ள ஓடை பகுதியில் விறகு வெட்ட செல்வதாக அக்கம்பக்கத்தினரிடம் கூறிவிட்டு சென்றார்.
வெகு நேரமாகியும் அவர் வீடு திரும்பவில்லை. பின்னர் ஓடை வழியாக சென்றவர்கள் சுசீலா தலையில் காயங்களுடன் இறந்து கிடந்ததை கண்டு அதிர்ச்சி அடைந்தனர்.
இது குறித்து மங்கலம் போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். விரைந்து வந்து போலீசார் மூதாட்டியின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக திருவண்ணாமலை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
மேலும் வழக்கு பதிவு செய்து சுசீலாவை யாராவது அடித்து கொலை செய்தார்களா? அல்லது தவறிக் கீழே விழுந்து அடிபட்டு இறந்தாரா? என பல்வேறு கோணங்களில் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.