உள்ளூர் செய்திகள்
கலெக்டர் பாஸ்கர பாண்டியன் மாற்றுதிறனாளிக்கு அடையாள அட்டை வழங்கிய காட்சி.

நலத்திட்ட உதவிகள் பெற மாற்றுத்திறனாளிகளுக்கு அடையாள அட்டை கட்டாயம்

Published On 2022-03-05 14:06 IST   |   Update On 2022-03-05 14:06:00 IST
நலத்திட்ட உதவிகள் பெற மாற்றுத்திறனாளிகளுக்கு அடையாள அட்டை கட்டாயம் என கலெக்டர் அறிவித்துள்ளார்.
ராணிப்பேட்டை:

ராணிப்பேட்டை அரசு மேல்நிலைப் பள்ளியில் மாற்றுத்திறனாளிகளுக்கு பிரத்யேக தேசிய அடையாள அட்டை பெறுவதற்கான பதிவு செய்யும் முகாம் நேற்று நடந்தது. 

மாற்றுத்திறனாளி நல அலுவலர் சரவணகுமார் தலைமை தாங்கினார். முதன்மை கல்வி அலுவலர் உஷா முன்னிலை வகித்தார். வாலாஜா தாசில்தார் ஆனந்தன் வரவேற்றார். இந்த முகாமில் கலெக்டர் பாஸ்கர பாண்டியன் கலந்துகொண்டு பார்வையிட்டு ஆய்வு செய்து கூறியதாவது:-

ராணிப்பேட்டை கலெக்டர் அலுவலகத்தில் ஒவ்வொரு வாரமும் செவ்வாய்க்கிழமை அன்று மாற்றுத்திறனாளிகளுக்கான முகாம் நடைபெற்று வந்தன. முகாமில் பெறப்பட்ட விண்ணப்பங்களின் மீது அன்றைய தினமே மருத்துவச் சான்றின் அடிப்படையில் தீர்வு காணப்பட்டு அவர்களுக்கு மாநில மாற்றுத்திறனாளி களுக்கான அடையாள அட்டைகள், வீடு கட்ட ஆணைகள், தமிழ்நாடு முதல்-அமைச்சரின் விரிவான மருத்துவ காப்பீடு திட்டத்திற்கான அடையாள அட்டைகள், பென்ஷன் போன்ற அரசு நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டன. 

மத்திய அரசு வழங்கும் பல்வேறு நலத்திட்டங்களை மாற்றுத்திறனாளிகள் பெற்றிட தேசிய அடையாள அட்டை மிகவும் முக்கியமானது. இந்த அட்டை தொலைந்து விட்டால் கூட இதனை எளிய முறையில் இணையதளத்தில் பதிவிறக்கம் செய்து கொள்ளலாம். மாவட்டத் திலுள்ள 18 குறு வட்டங்களில் தேசிய அடையாள அட்டை முகாம் நடத்த திட்டமிடப்பட்டுள்ளது. 

மாற்றுத்திறனாளிகள் இந்த முகாமில் வரவில்லை என்றாலும் சம்பந்தப்பட்ட கிராம நிர்வாக அலுவலரிடமும் வழங்கலாம். அவர்கள் மூலமாக விண்ணப்பங்கள் தாசில்தார் அலுவலகத்தில் இணையதளத்தில் பதிவேற்றம் செய்யப்படும். 

மருத்துவர்களின் பரிந்துரையின் அடிப்படையில் உங்களுக்கு தேசிய அடையாள அட்டைகள் வழங்கப்படும். இவ்வாறு அவர் பேசினார்.

Similar News