உள்ளூர் செய்திகள்
கைது

கொடி கம்பம் மாயம்: விடுதலை சிறுத்தை கட்சியினர் மறியல்- 70 பேர் அதிரடி கைது

Published On 2022-03-03 10:16 GMT   |   Update On 2022-03-03 10:16 GMT
கொடி கம்பம் மாயமான சம்பவம் குறித்து போராட்டத்தில் ஈடுபட்ட விடுதலை சிறுத்தைகள் கட்சியினர் 70 பேரை போலீசார் கைது செய்தனர்.

கடலூர்:

கடலூர் அருகே நெல்லிக்குப்பம்- பாலூர் கடைத்தெருவில் கடந்த சில மாதங்களுக்கு முன்பு விடுதலை சிறுத்தை கட்சியினர் தங்களது கட்சியின் கொடி கம்பம் வைக்க ஏற்பாடு செய்தனர்.

அப்போது அந்த பகுதியை சேர்ந்த சிலர் கொடிக்கம்பத்தை வைக்க எதிர்ப்பு தெரிவித்தனர். இதனால் அங்கு அப்போது மோதல் ஏற்படும் சூழ்நிலை நிலவியது.

சம்பவ இடத்துக்கு வருவாய் கோட்டாட்சியர் மற்றும் போலீசார் அங்கு வந்து இருதரப்பினரிடையே பேச்சுவார்த்தை நடத்தி சமரச கூட்டத்துக்கு வருமாறு அழைத்தனர். அதன்படி வருவாய் கோட்டாட்சியர் அலுவலகத்தில் சமரச கூட்டம் நடந்தது. ஆனால், உடன்பாடு ஏற்படவில்லை.

நேற்று இரவு விடுதலை சிறுத்தை கட்சியினர் பாலூர் கடைத்தெருவில் உள்ள தி.மு.க. கொடி கம்பத்தின் அருகே தங்களது கட்சியின் கொடி கம்பத்தை திடீரென்று நட்டு விட்டு சென்றனர்.

இன்று காலை அங்கு வந்த விடுதலை சிறுத்தை பிரமுகர்கள், தங்களது கட்சி கொடி கம்பத்தை காணாததை கண்டு அதிர்ச்சி அடைந்தனர். இதையறிந்த கட்சி நிர்வாகிகள் மற்றும் பிரமுகர்கள் அங்கு திரண்டனர்.

அவர்கள் திடீரென்று சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனால் அங்கு பெரும் பதட்டமான சூழ்நிலை நிலவியது. கடலூர்-பாலூர் சாலையில் போக்குவரத்து முற்றிலுமாக முடங்கியது. பள்ளி, கல்லூரி செல்லும் மாணவ-மாணவிகள் பஸ்கள் இயங்காததால் பெரும் தவிப்புக்குள்ளானார்கள்.

போராட்டம் பற்றிய தகவல் அறிந்ததும் கூடுதல் போலீஸ் சூப்பிரண்டு அசோக்குமார், கடலூர் துணை போலீஸ் சூப்பிரண்டு கரிகால் பாரி பண்ருட்டி துணை போலீஸ் சூப்பிரண்டு சபியுல்லா தலைமையில் 75-க்கும் மேற்பட்ட போலீசார் அங்கு விரைந்து வந்தனர்.

போராட்டக்காரர்கள் ஏற்கனவே தங்களது கட்சி கொடி கம்பத்தை வைப்பது தொடர்பாக கோட்டாட்சியர் தலைமை யில் நடந்த பேச்சு வார்த்தையில் தீர்வு காணப்படவில்லை. எனவே, உடனடியாக கோட்டாட்சியர் இங்கு வந்து பேச்சுவார்த்தை நடத்தி எங்களுக்கு உரிய தீர்வு கிடைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று வலியுறுத்தினர்.

தகவல்அறிந்த வருவாய் கோட்டாட்சியர் அதியமான கவியரசு சம்பவ இடத்துக்கு விரைந்தார். அங்கு மறியல் செய்தவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினார். ஆனால் தீர்வு எட்டப்படவில்லை.

இதையடுத்து போராட்டத்தில் ஈடுபட்ட விடுதலை சிறுத்தைகள் கட்சியினர் 70 பேரை போலீசார் கைது செய்தனர்.

Tags:    

Similar News