உள்ளூர் செய்திகள்
நாதஸ்வர இசை நிகழ்ச்சி நடந்த காட்சி.

சிவராத்திரி விழாவை முன்னிட்டு திருவண்ணாமலை கோவிலில் 24 மணி நேரம் இடைவிடாமல் நடந்த நாதஸ்வர கச்சேரி

Published On 2022-03-02 16:31 IST   |   Update On 2022-03-02 16:31:00 IST
சிவராத்திரி விழாவை முன்னிட்டு திருவண்ணாமலை கோவிலில் 24 மணி நேரம் இடைவிடாமல் நாதஸ்வர கச்சேரி நடைபெற்றது.
திருவண்ணாமலை:

திருவண்ணாமலையில் அருணாசலேஸ்வரர் கோவில் பஞ்ச பூத ஸ்தலங்களில் அக்னி ஸ்தலமாக விளங்குகிறது. இந்த கோவிலில் நடைபெறும் விழாக்களில் சிவராத்திரி விழா மிகவும் முக்கியத்துவம் வாய்ந்தது என்று கருதப்படுகிறது. 

சிவராத்திரி தோன்ற காரணமாக இருந்தது திருவண்ணாமலை அருணாசலேஸ்வரர் கோவில் தான் என்பது குறிப்பிடத்தக்கது. இதனால் தமிழகம் முழுவதும் இருந்து ஆயிரக்கணக்கான பக்தர்கள் சிவராத்திரி விழாவில் பங்கேற்க நேற்று திருவண்ணாமலை வந்தனர். சிவராத்திரி விழாவை முன்னிட்டு நேற்று காலை கோவிலில் பல்வேறு வண்ண மலர்களால் அலங்கரித்து சுவாமிக்கு லட்சார்ச்சனை நடைபெற்றது.

சிவராத்திரியையொட்டி நேற்று இரவு முதல் இன்று (புதன்கிழமை) அதிகாலை வரை 4 கால பூஜைகள் நடைபெற்றது. முதல் கால பூஜையை பிரம்மாவும், 2&ம் கால பூஜையை திருமாலும், 3-ம் கால பூஜையை உமையாளும், 4&ம் கால பூஜையை முப்பத்து முக்கோடி தேவர்களும் செய்ததாக ஐதீகம்.

பக்தர்கள் கட்டணம் மற்றும் கட்டணமில்லா தரிசனம் செய்வதற்கு ஏற்பாடுகள் செய்யப் பட்டிருந்தது. நள்ளிரவு 12 மணிக்கு சாமி சன்னதியின் பின்பகுதியில் அமைந்துள்ள லிங்கோத்பவ மூர்த்திக்கு சிறப்பு அபிஷேக, ஆராதனை நடைபெற்றது. 

சிவபூஜையில் பயன்படுத்தக் கூடாத மலராக கருதப்படும் தாழம்பூ இந்த பூஜையில் மட்டும் பயன்படுத்தப்படும்.அதன்படி நேற்றைய பூஜையிலும் தாழம்பூ வைத்து வழிபாடுகள் நடைபெற்றது பின்னர் சிறப்பு தீபாராதனை நடந்தது. இதில் முக்கியமான பக்தர்கள் மட்டுமே அனுமதிக்கப்பட்டனர்.

கோவிலில் இரவு முழுவதும் நடைபெற்ற சிறப்பு வழிபாடுகளில் பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் கலந்து கொண்டு விடிய, விடிய சாமி தரிசனம் செய்தனர்.

கொரோனா பரவல் தடுப்பு நடவடிக்கையாக கோவிலுக்குள் வரும் பக்தர்கள் கண்டிப்பாக முகக்கவசம் அணிய வேண்டும் என்றும் சமூக இடைவெளியை பின்பற்ற வேண்டும் என்றும் கோவில் நிர்வாகத்தால் அறிவுறுத்தப்பட்டது.

மேலும் கோவிலின் ராஜகோபுரத்தின் முன்பு மகாசிவராத்திரியை முன்னிட்டு திருவண்ணா மலை மாவட்ட கிரிவல நாதஸ்வரம் தவில் இசை சங்கத்தின் சார்பில் உலக அமைதிக்காக தலைவர் பிச்சாண்டி தலைமையில் சுமார் 100&க்கும் மேற்பட்ட நாதஸ்வரம், தவில் இசை கலைஞர்களின் இசை நிகழ்ச்சி நேற்று காலை தொடங்கி இன்று காலை வரை 24 மணிநேரம் தொடர்ந்து நடைபெற்றது. 

அதேபோல் கோவில் வளாகத்தில் உள்ள கலையரங்கத்தில் பரத நாட்டிய நிகழ்ச்சி நடைபெற்றது. இதனை கோவிலுக்கு வந்த பக்தர்கள் கண்டு ரசித்தனர். மேலும் கோவிலுக்கு முன்பு அமைந்துள்ள சக்கர குளத்தில் இரவில் பக்தர்கள் லட்ச தீபம் ஏற்றினர். அது கண் கொள்ளா காட்சியாக இருந்தது.

சிவராத்திரியை முன்னிட்டு ஏராளமான பக்தர்கள் கோவிலின் பின்புறம் உள்ள அண்ணாமலையை சுற்றி கிரிவலம் சென்றனர். கிரிவலப்பாதையில் உள்ள அஷ்ட லிங்க கோவில்களிலும் வாழை தோரணங்கள் கட்டப்பட்டு வண்ண மின் விளக்குகளால் அலங்கரிக்கப்பட்டு இருந்தது. 

சிவராத்திரி விழாவினால் பல மாதங்களாக கொரோனா பரவலால் பாதிக்கப்பட்டு மன அழுத்தத்தில் இருந்த பக்தர்கள் அதில் இருந்து விடுபட்டனர் என்பது குறிப்பிடத்தக்கது.

சிவராத்திரி விழாவிற் கான ஏற்பாடுகளை கோவில் இணை ஆணையர் அசோக் குமார் மற்றும் அலுவலர்கள் செய்திருந்தனர். ஏராளமான போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர்.

Similar News