உள்ளூர் செய்திகள்
பள்ளி மாணவர்களை ஏற்றிவந்த வேன் தலைகுப்புற கவிழ்ந்து கிடக்கும் காட்சி-வேன் டிரைவர் மனோகர்.

பள்ளி வேன் கவிழ்ந்து மாணவர்கள் காயம்

Published On 2022-03-02 14:36 IST   |   Update On 2022-03-02 14:36:00 IST
மயிலாடுதுறையில் பள்ளி வேன் கவிழ்ந்து 25-க்கும் மேற்பட்ட மாணவர்கள் காயமடைந்தனர்-டிரைவர் கைது செய்யப்பட்டார்.
தரங்கம்பாடி:

மயிலாடுதுறையில் உள்ள மெட்ரிக் பள்ளிகளில் படிப்பதற்காக ஆந்தக்குடி, மாப்படுகை, உள்ளிட்ட பல்வேறு கிராமங்களில் இருந்து ஏராளமான மாணவர்கள் தினமும் அரசு பஸ், தனியார் வேன் மூலம் மயிலாடுதுறை நகருக்கு வந்து படித்து செல்கின்றனர்.

அந்தவகையில் மயிலாடுதுறை நகரில் உள்ள 5-க்கும் மேற்பட்ட தனியார் பள்ளிகளில் இருந்து மாணவர்களை பள்ளி முடிந்து ஏற்றிக் கொண்டு வந்த தனியார் வேன் மயிலாடுதுறை வடக்கு சாலிய தெரு வழியாக வேகமாக வந்தபோது பாதாள சாக்கடை உள்ள பகுதியில் நிலை தடுமாறிய போது திடீரென டயர் வெடித்து அருகில் இருந்த மின்கம்பத்தில் மோதி மாணவ-மாணவிகளுடன் கவிழ்ந்தது. 

மாணவர்களின் அலரல் சத்தம் கேட்ட அப்பகுதி மக்கள் வேன் கண்ணாடியை உடைத்து 30-க்கும் மேற்பட்ட மாணவ மாணவிகளை பத்திரமாக மீட்டனர். 

இதில் காயம் அடைந்த மாணவர்களை 108 ஆம்புலன்ஸ் மூலம் மயிலாடுதுறை அரசு மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டுள்ளனர். அங்கே தீவிரசிகிச்சை அளிக்கப்பட்டது. இதில் 10 மாணவர்கள் பலத்த காயமடைந்தனர். 14 பேர் லேசான காயமடைந்தனர்.

வேனில் வந்த மாணவ, மாணவிகள் கூறுகையில் வேன் வேகமாகவும், அதிக சத்தத்துடன் பாட்டு கேட்டு வந்ததே இந்த விபத்துக்கு காரணம் என்றனர். தகவலறிந்த மாவட்ட கலெக்டர் லலிதா, மாவட்ட வருவாய் அலுவலர் முருகதாஸ், கோட்டாட்சியர் பாலாஜி, தாசில்தார் ராகவன் ஆகியோர் மாணவர்களுக்கு ஆறுதல் கூறினர். 

பள்ளி வேன் டிரைவர் நீடூர் பிள்ளையார் கோவில் தெருவைச் சேர்ந்த மனோகரை போலீசார் கைது செய்து விசாரித்து வருகின்றனர்.

Similar News