உள்ளூர் செய்திகள்
பஸ்சை சிறைப்பிடித்து பொதுமக்கள் போராட்டம்
மயிலாடுதுறை அருகே அரசு பஸ்சை சிறைப்பிடித்து பொதுமக்கள் போராட்டம் நடத்தினர்.
சீர்காழி:
மயிலாடுதுறையில் இருந்து கோடங்குடி வழியாக நெடுமருதூர் கிராமத்துக்கு ஒரே ஒரு அரசு டவுன் பஸ் இயக்கப்பட்டு வருகிறது.
கோடங்குடி மார்க்கமாக இயக்கப்படும் இந்த பஸ் சரியான நேரத்திற்கு இயங்காததால் மாணவ&மாணவிகள் அவதியடைந்தனர்.
குறிப்பிட்ட நேரத்தில் பஸ் வராததால் பள்ளிக்கு தினமும் தாமதமாக செல்ல வேண்டிய நிலையும் ஏற்பட்டது. பொதுமக்களும் பாதிப்பு அடைந்தனர்.
இதனால் ஆத்திரமடைந்த பொதுமக்கள் முறைப்படி இயக்கப்படாத அந்த பஸ் கோடங்குடி வந்தபோது சிறைப்பிடித்து போராட்டத்தில் ஈடுபட்டனர்.
தகவல் அறிந்த பெரம்பூர் போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்து பேச்சுவார்த்தை நடத்தினர்.
அப்போது பொதுமக்கள், மதியம், இரவு என கூடுதலாக ஒரு பஸ்சை இயக்க வேண்டும், தினமும் 5 முறை மயிலாடுதுறை முதல் கோடங்குடி மார்க்கமாக அரசு பஸ்களை இயக்க வேண்டும் என்று வலியுறுத்தினர்.
உங்களது கோரிக்கைகள் மேல் அதிகாரிகளிடம் பேசி தீர்த்து வைக்கப்படும் என்று போலீசார் கூறியதின் பேரில் பொதுமக்கள் மறியலை கைவிட்டு கலைந்து சென்றனர்.