உள்ளூர் செய்திகள்
எருது விடும் விழாவில் சீறி பாய்ந்த காளைகள்.

குடியாத்தம் எர்த்தாங்கலில் மாடு விடும் விழா

Published On 2022-02-27 08:59 GMT   |   Update On 2022-02-27 08:59 GMT
குடியாத்தம் எர்த்தாங்கலில் மாடு விடும் விழாவில் காளைகள் முட்டியதில் 12 பேர் காயம் அடைந்தனர்.
குடியாத்தம்:

வேலூர் மாவட்டம் குடியாத்தம் அருகே எர்த்தாங்கல் கிராமத்தில் ஸ்ரீ சாமுண்டீஸ்வரி அம்மன் திருவிழா முன்னிட்டு 48-ம் ஆண்டு காளை விடும் திருவிழா நடைபெற்றது.

இதில் குடியாத்தம், கே வி குப்பம், லத்தேரி, காட்பாடி, பேரணாம்பட்டு, வாணியம்பாடி, ஆம்பூர், திருப்பத்தூர், ஆந்திர மாநிலம் சித்தூர், பங்காருபாளையம் உள்ளிட்ட பகுதிகளைச் சேர்ந்த 150க்கும் மேற்பட்ட காளைகள் கலந்து கொண்டன. 

காளை ஓடும் வீதிகளின் இரு பகுதியிலும் தடுப்பு கம்புகள் அமைக்கப்பட்டிருந்தன, விழா தொடங்குவதற்கு முன்பு கால்நடை மருத்துவர்கள் காளைகளை பரிசோதனை செய்தனர்.

தொடர்ந்து போட்டிகளில் பங்கு பெற்ற காளைகள் சீறிப் பாய்ந்து ஓடின. இந்தப் போட்டிகளை குடியாத்தம் அமலுவிஜயன் எம்.எல்.ஏ. தொடங்கி வைத்தார். 

காளைவிடும் விழாவை காண குடியாத்தம் மற்றும் சுற்றுப்புற கிராமங்களை சேர்ந்த ஆயிரக்கணக்கான பொதுமக்கள் திரண்டு வந்து காளைகள் ஓடுவதைப் பார்த்து ரசித்து மகிழ்ந்தனர்.

காளை விடும் விழாவில் காளைகள் முட்டியதில் 12 பேர் காயமடைந்தனர் அவர்களை அங்கு அமைக்கப்பட்டிருந்த மருத்துவ முகாமில் முதலுதவி சிகிச்சை அளிக்கப்பட்டது. 

பலத்த காயமடைந்த ஒருவர் குடியாத்தம் அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்க்கப்பட்டார்.

காளை விடும் விழாவில் வெற்றி பெற்ற 59 காளைகளின் உரிமையாளர்களுக்கு பரிசுகள் வழங்கப்பட்டது. குடியாத்தம் துணை போலீஸ் சூப்பிரண்டு ராமமூர்த்தி தலைமையில் இன்ஸ்பெக்டர் கணபதி உள்பட 50க்கும் மேற்பட்ட போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்தனர்.

Tags:    

Similar News