உள்ளூர் செய்திகள்
சித்தப்பாவை கொலை செய்ததை போதையில் உளறிய வாலிபர் கைது
தொழிலாளி தற்கொலையில் திடீர் திருப்பம்&சித்தப்பாவை கொலை செய்ததை போதையில் உளறிய வாலிபர் கைது செய்யப்பட்டார்.
தரங்கம்பாடி:
மயிலாடுதுறை மாவட்டம், தரங்கம்பாடி தாலுக்கா, கேசவன்பாளையத்தை சேர்ந்தவர் நாகராஜ் (45). டீக்கடையில் வேலை பார்த்துவந்த நாகராஜ் கடந்த 19-ஆம் தேதி வீட்டில் தூக்குமாட்டி இறந்தார்.
அவர் தற்கொலை செய்து கொண்டதாக நினைத்த அவரது உறவினர்கள் இதுகுறித்து காவல்துறையினருக்கு புகார் அளிக்காமல் நாகராஜின் உடலை 20 தேதி மாலை அடக்கம் செய்துவிட்டனர்.
இந்நிலையில், நேற்று நாகராஜின் அண்ணன் மகன் கூலித்தொழிலாளியான பாலசிகாமணி (33) குடிபோதையில் தனது சித்தப்பாவை கொன்றது நான்தான் என அப்பகுதியினரிடம் உளறியுள்ளார்.
குடிபோதையில் இருந்த தனது சித்தப்பா நாகராஜ் தன்னை திட்டியதால் ஆத்திரமடைந்து கழுத்தை நெரித்து கொன்றதாகவும், அதன்பின்னர் துண்டால் கழுத்தில் சுற்றி ஜன்னலில் கட்டி விட்டதாகவும், அப்போது தானும் குடிபோதையில் இருந்ததாகவும் பாலசிகாமணி கூறியுள்ளார்.
இந்த சம்பவம் குறித்து சாத்தங்குடி கிராம நிர்வாக அலுவலர் முத்தையா பொறையார் போலீசில் அளித்த புகாரைத் தொடர்ந்து, போலீசார் நாகராஜின் உடலை தோண்டி எடுத்து, பிரேத பரிசோதனை செய்து பின்னர் புதைத்தனர்.
மேலும், பாலசிகாமணியை கைது செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியது.