உள்ளூர் செய்திகள்
தண்டராம்பட்டு அருகே கரும்பு தோட்டத்துக்கு தூக்கிச் சென்று இளம்பெண்ணை பலாத்காரம் செய்ய முயற்சி
தண்டராம்பட்டு அருகே கரும்பு தோட்டத்துக்கு தூக்கிச் சென்று இளம்பெண்ணை பலாத்காரம் செய்ய முயற்சி செய்ததால் வாலிபருக்கு பொதுமக்கள் தர்ம அடி கொடுத்து போலீசாரிடம் ஒப்படைத்தனர்.
திருவண்ணாமலை:
திருவண்ணாமலை மாவட்டம் வாணாபுரம் பகுதியை சேர்ந்த 30 வயது இளம்பெண் நேற்று மாலை விவசாய கூலி வேலைக்கு சென்று விட்டு வீட்டிற்கு திரும்பிக் கொண்டிருந்தார்.
அங்குள்ள விவசாய நிலம் வழியாக அவர் தனியாக நடந்து சென்று கொண்டிருந்தார்.அதே கிராமத்தைச் சேர்ந்த வாலிபர் ஒருவர் இளம் பெண்ணை பின்தொடர்ந்து வந்தார்.
அங்குள்ள கரும்பு தோட்டத்தின் அருகே வந்தபோது வாலிபர் திடீரென இளம்பெண்ணை வாயில் துணியால் அமுக்கி கரும்பு தோட்டத்திற்குள் தூக்கிச் சென்றார். அங்கு வைத்து பெண்ணின் வாயில் துணியை வைத்து பாலியல் பலாத்காரம் செய்ய முயன்றார்.
அவரது பிடியில் இருந்து தப்பிய இளம்பெண் வாயில் இருந்த துணியை எடுத்துவிட்டு கத்தி கூச்சலிட்டார்.
சத்தம் கேட்டு அந்த பகுதி பொதுமக்கள் கரும்பு தோட்டத்திற்கு ஓடிவந்தனர். வாலிபரின் பிடியிலிருந்து பெண்ணை மீட்டனர். மேலும் வாலிபருக்கு தர்ம அடி கொடுத்து பாணாவரம் போலீஸ் நிலையத்தில் ஒப்படைத்தனர்.
பலாத்கார முயற்சியில் காயமடைந்த இளம்பெண் திருவண்ணாமலை அரசு ஆஸ்பத்திரியில் சேர்க்கப்பட்டார். திருவண்ணாமலை டி.எஸ்.பி அண்ணாதுரை, இன்ஸ்பெக்டர் தனலட்சுமி மற்றும் போலீசார் சம்பவ இடத்திற்கு நேரில் சென்று விசாரணை நடத்தினர்.
மேலும் இதுதொடர்பாக வாலிபரிடம் விசாரித்து வருகின்றனர்.