பவானி நகராட்சியில் 4 இடங்களில் தி.மு.க. வெற்றி
பவானி:
ஈரோடு மாவட்டம் பவானி நகராட்சியில் மொத்தம் 27 வார்டுகள் உள்ளன. இதில் தி.மு.க, அ.தி.மு.க. மற்றும் பல்வேறு கட்சிகளை சேர்ந்த வேட்பாளர்கள், சுயேச்சை வேட்பாளர்கள் என மொத்தம் 112 பேர் போட்டியிட்டனர்.
தேர்தலில் 79.78 சதவீதம் வாக்குகள் பதிவானது. ஓட்டுப்பதிவு முடிந்ததும் பலத்த பாதுகாப்புடன் ஓட்டு எண்ணும் மையமான பவானி அரசு பெண்கள் மேல்நிலைப்பள்ளிக்கு கொண்டு செல்லப்பட்டு பாதுகாப்பாக வைக்கப்பட்டது.
இன்று காலை 8 மணிக்கு மின்னணு எந்திரத்தில் பதிவான வாக்குகள் எண்ணும் பணி வேட்பாளர்கள் முன்னிலையில் தொடங்கியது. இதற்காக 4 மேஜைகள் போடப்பட்டு இருந்தது. ஒரு மேஜைக்கு 2 பேர் என்று 8 பேர் ஓட்டு எண்ணும் பணியில் ஈடுபட்டனர்.
1-வது வார்டில் தி.மு.க. வேட்பாளர் வடிவேல் 500 வாக்குகள் பெற்று வெற்றி பெற்றார். 2-வது வார்டில் தி.மு.க. வேட்பாளர் மோகன்ராஜ் 435 வாக்குகள் பெற்று வெற்றி பெற்றார். இவரை எதிர்த்து போட்டியிட்ட அ.தி.மு.க. வேட்பாளர் விஜயகுமாரி 434 ஓட்டுகள் பெற்றார். ஒரு ஓட்டு வித்தியாசத்தில் தி.மு.க. வேட்பாளர் வெற்றி பெற்றது குறிப்பிடத்தக்கது. 3-வது வார்டில் அ.தி.மு.க. வேட்பாளர் சிவக்குமார் 407 வாக்குகள் பெற்று வெற்றி பெற்றார். 4-வது வார்டில் தி.மு.க. வேட்பாளர் கார்த்திகேயன் 380 வாக்குகள் பெற்று வெற்றி பெற்றார். 5-வது வார்டில் தி.மு.க. வேட்பாளர் சந்தோஷ் 461 வாக்குகள் பெற்று வெற்றி பெற்றார். தொடர்ந்து வாக்குகள் எண்ணப்பட்டு வருகிறது.