உள்ளூர் செய்திகள்
நெடுஞ்சாலை தடுப்பு வேலியில் பைக் மோதி தொழிலாளி பலி
நாட்டறம்பள்ளி அருகே நெடுஞ்சாலை தடுப்பு வேலியில் பைக் மோதி தொழிலாளி பலியானர்.
ஜோலார்பேட்டை:
கிருஷ்ணகிரி மாவட்டம் பர்கூர் அடுத்த அங்கிநாயக்கன்பள்ளி பகுதியை சேர்ந்தவர் பெரியண்ணன். இவரது மகன் சக்தி (வயது40) .
இவர் கட்டிட தொழிலாளியாக வேலை செய்து வந்தார் இவரது மனைவி சுமதி (35) இவர்களுக்கு 2 மகன்கள் ஒரு மகள் உள்ளனர்.
சக்தி பைக்கில் தனது மனைவி சுமதியை பின்னால் அமரவைத்து வாணியம்பாடியிலிருந்து கிருஷ்ணகிரி நோக்கி நெடுஞ்சாலையில் சென்று கொண்டிருந்தனர்.
நாட்டறம் பள்ளி அருகே வெலகல் நத்தம் மேம்பாலம் அருகே சென்றபோது மோட்டார் சைக்கிள் கட்டுப்பாட்டை இழந்து சாலை ஓரத்தில் உள்ள தடுப்பு வேலியில் மோதியது. இதில் இருவரும் படுகாயம் அடைந்தனர்.
தலையில் பலத்த காயம் ஏற்பட்டதால் சக்தி மனைவி கண்முன்னே துடிதுடித்து பரிதாபமாக உயிரிழந்தார்.
இது குறித்து தகவலறிந்ததும் நாட்டறம்பள்ளி போலீஸ் இன்ஸ்பெக்டர் சாந்தி சப்-இன்ஸ்பெக்டர் முனிரத்தினம் மற்றும் போலீசார் சம்பவம் இடத்திற்கு விரைந்து சென்று பிணத்தை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக திருப்பத்தூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
மேலும் படுகாயமடைந்த சுமதியை மீட்டு திருப்பத்தூர் அரசு மருத்து வமனைக்கு அனுப்பி வைத்தனர். இதுகுறித்து நாட்டறம்பள்ளி போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.