உள்ளூர் செய்திகள்
மின்னணு வாக்குப்பதிவு எந்திரங்கள் ஓட்டு எண்ணும் மையத்தில் பூட்டி சீல் வைப்பு
நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலில் மாநகராட்சி பகுதிகளில் பதிவான மின்னணு வாக்குப்பதிவு எந்திரங்கள் ஓட்டு எண்ணும் மையமான ஐ.ஆர்.டி.டி. கல்லூரியில் பூட்டி சீல் வைக்கப்பட்டது.
ஈரோடு:
நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலில் மாநகராட்சி பகுதிகளில் பதிவான மின்னணு வாக்குப்பதிவு எந்திரங்கள் ஓட்டு எண்ணும் மையமான ஐ.ஆர்.டி.டி. கல்லூரியில் பூட்டி சீல் வைக்கப்பட்டது.
ஈரோடு மாவட்டத்தில் நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல் 1,219 வாக்குச் சாவடிகளில் நேற்று வாக்குப்பதிவு நடந்தது. வாக்குப்பதிவு நேற்று காலை 7 மணிக்கு தொடங்கி மாலை 6 மணியுடன் நிறைவடைந்தது.
இதனைத்தொடர்ந்து வாக்குப்பதிவு முடிந்தவுடன் வாக்குசாவடி அலுவலர்கள் மின்னணு வாக்குப்பதிவு எந்திரங்களை அரசியல் கட்சி முகவர்கள் முன்னிலையில் பூட்டி சீல் வைத்தனர்.
பின்னர் மண்டல அலுவலர்கள் ஒவ்வொரு வாக்குச்சாவடியாக சென்று வாக்குப்பதிவு எந்திரங்கள் முறையாக சீலிடப்பட்டுள்ளதா? என சோதனையிட்டு வாகனங்களில் ஏற்றி, துப்பாக்கி ஏந்திய போலீஸ் பாதுகாப்புடன் வாக்கு எண்ணிக்கை மையத்திற்கு அனுப்பி வைத்தனர்.
இதில், ஈரோடு மாநகரா ட்சியில் பயன்படுத்தப்பட்ட மின்னணு வாக்குப்பதிவு எந்திரங்கள் வாக்கு எண்ணிக்கை மையமான சித்தோடு ஐ.ஆர்.டி.டி.கல்லூரியிலும், பவானி நகராட்சியில் பயன்படுத்தப்பட்ட வாக்குப்பதிவு எந்திரங்கள் பவானி அரசு பெண்கள் மேல்நிலைப்பள்ளிக்கும்,
கோபி நகராட்சியில் வைர விழா உயர்நிலைப் பள்ளியில் உள்ள கே.எம்.ஆர் ஹாலிலும், சத்தியமங்கலம் நகராட்சிக்கு சத்தியமங்கலத்தில் உள்ள காமதேனு கலை அறிவியல் கல்லூரிக்கும், புஞ்சை புளியம்பட்டி நகராட்சியில் புஞ்சைபுளியம்பட்டி அரசு பெண்கள் மேல்நிலைப்பள்ளிக்கும் வாக்குப்பெட்டிகள் அனுப்பி வைக்கப்பட்டது.
இதேபோல் சித்தோடு, நசியனூர் பேரூராட்சிகளில் பயன்படுத்தப்பட்ட வாக்குப்பதிவு எந்திரங்கள் வாசவி கலை மற்றும் அறிவியல் கல்லூரியிலும், அவல்பூந்துறை, சிவகிரி, கொல்லான் கோவில், மொடக் குறிச்சி, வடுகப் பட்டி, அரச்சலூர் ஆகிய பேரூராட்சிக்குட்பட்ட வாக்குப்பதிவு எந்திரங்கள் மொடக்குறிச்சியில் உள்ள அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளியிலும்,கொடுமுடி, சென்னசமுத்திரம், வெங்கம்பூர், கிளாம்பாடி, பாசூர், ஊஞ்சலூர், வெள்ளோடம்பரப்பு ஆகிய பேரூராட்சிக்குட்பட்ட வாக்குப்பதிவு எந்திரங்கள் கொடுமுடியில் உள்ள ஸ்ரீசங்கராவித்தியாசல பெண்கள் மேல்நிலைப் பள்ளியிலும், பெத்தாம்பாளையம், பெருந்துறை, கருமாண்டி செல்லிபாளையம், நல்லாம் பட்டி, காஞ்சிக்கோவில், பள்ளபாளையம், சென்னிமலை ஆகிய பேரூராட்சிக்குட்பட்ட பகுதிகளில் உள்ள வாக்குப்பதிவு எந்திரங்கள் பெருந்துறையில் உள்ள கொங்கு வேளாளர் மெட்ரிகுலேஷன் உயர்நிலைப்பள்ளியிலும், ஆப்பக்கூடல், ஜம்பை, பி.மேட்டுப்பாளையம், சலங்கபாளையம் ஆகிய பேரூராட்சிக்கு உட்பட்ட வாக்குப்பதிவு எந்திரங்கள் பவானியில் உள்ள அரசு பெண்கள் மேல்நிலைப்பள்ளியிலும், அந்தியூர், அத்தாணி, நெருஞ்சிப்பேட்டை, அம்மாபேட்டை, ஒலகடம் ஆகிய பேரூராட்சிக்கு உட்பட்ட வாக்கவாக்குப்பதிவு எந்திரங்கள் அந்தியூரில் உள்ள அரசு பெண்கள் மேல்நிலைப் பள்ளியிலும், லக்கம்பட்டி, கூகலூர், காசிபாளையம் (கோபி), எலத்தூர், நம்பியூர், கொளப்பலூர் ஆகிய பேரூராட்சியில் உள்ள வாக்குப்பதிவு எந்திரங்கள் கோபிசெட்டி பாளையத்தில் உள்ள கோபி கலை மற்றும் அறிவியல் கல்லூரியிலும், அரியப்பம்பாளையம், பெரிய கொடிவேரி, கெம்பநாயக்கன்பாளையம், வாணிபுதூர் ஆகிய பேரூராட்சிகளில் பதிவான வாக்குகள் சத்தியமங்கலத்தில் உள்ள காமதேனு கலை மற்றும் அறிவியல் கல்லூரி யிலும், பவானிசாகர் பேரூராட்சியில் பதிவான வாக்குப்பதிவு எந்திரங்கள் பவானிசாகரில் உள்ள ஹோலி ரெட்டிம்பர்ஸ் மெட்ரிக்குலேசன் பள்ளிக்கும், மேலும் அந்தந்த பேரூராட்சிக்கு ஒதுக்கப்பட்ட வாக்கு எண்ணிக்கை மையத்திற்கு அனுப்பி வைக்கப்பட்டன.
அங்கு தேர்தல் அலுவலர்கள் வாக்குப் பெட்டிகளை சோதனை செய்து, பாதுகாப்பு அறையில் வைக்கும் பணியினை மேற்கொண்டனர். இந்த பணிகள் நள்ளிரவு வரை தொடர்ந்து நடந்தது.
வாக்குப்பதிவு எந்திரங்கள் வைக்கப்பட்டுள்ள அறைகளில் 3 அடுக்கு போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. இங்கு துப்பாக்கி ஏந்திய போலீசாரும், 24 மணி நேரம் சுழற்சி முறையில் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.