உள்ளூர் செய்திகள்
கோப்புப்படம்.

சிறுத்தை கடித்து ஆடுகள் பலியானதாக பரபரப்பு

Published On 2022-02-20 14:53 IST   |   Update On 2022-02-20 14:53:00 IST
டி.என்.பாளையம் அருகே சிறுத்தை கடித்து ஆடுகள் பலியானதாக கூறி வனத்துறையினருடன் கிராம மக்கள் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர்.
டி.என்.பாளையம்:

டி.என்.பாளையம் அருகே சிறுத்தை கடித்து ஆடுகள் பலியானதாக கூறி வனத்துறையினருடன் கிராம மக்கள் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர்.

கோபிசெட்டி பாளையத்தை  சேர்ந்தவர் சுந்தர்ராஜ் (60). இவருக்கு சொந்தமான விவசாய நிலம் டி.என்.பாளையம் அடுத்த நஞ்சை புளியம்பட்டியில் பவானி ஆற்றோரம் உள்ளது.

சுந்தர்ராஜ் தனது தோட்டத்தில் 6 ஆடுகளும், 10-க்கும் மேற்பட்ட மாடுகளையும் வளர்த்து வருகிறார். 

சம்பவத்தன்று சுந்தர்ராஜ் தோட்டத்தில் ஆடுகளை அங்கு இருந்த கொட்டகையில் கட்டி வைத்து விட்டு தீவனம் எடுப்பதற்காக சென்றார்.

அப்போது ஆடுகள் கத்தும் சத்தம் கேட்டு வந்து பார்த்த போது நாய் ஒன்று 4 ஆடுகளை கடித்து குதறி விட்டு சென்றதாக தெரிகிறது. இதில் 4 ஆடுகளும் பலியானது. 

இது குறித்து தகவல் அறிந்து சம்பவயிடத்திற்கு  வந்த டி.என்.பாளையம் வனத்துறையினர் இறந்து கிடந்த ஆடுகளை ஆய்வு செய்தனர். மேலும் அங்கு கால் தடயங்களை ஆய்வு செய்தனர். 

அதில் சிறுத்தை நடமாட்டம் இல்லை என்பதும், நாய்கள் தான் ஆடுகளை கடித்து கொன்றது என்பதை வனத்துறையினர் உறுதி செய்தனர்.

இதற்கிடையே ஆடுகளை சிறுத்தை தான் கடித்து கொன்று விட்டதாக தகவல் பரவியதும் 100-க்கும் மேற்பட்ட கிராமமக்கள் அங்கு திரண்டனர். 

ஏற்கனவே அதே பகுதியில் சில நாட்களுக்கு முன்பு 4 ஆடுகளை மர்ம விலங்கு கடித்து கொன்ற நிலையில் வனத்துறையினர் அங்கு 2 நாட்களாக கேமிராக்களை பொருத்தி கண்காணித்தனர். அதில் சிறுத்தை நடமாட்டம் அந்த பகுதியில் இல்லை என்பதும், ஆடுகளை நாய்கள் கடித்து கொன்றதும் தெரிய வந்தது.

இந்நிலையில் சுந்தர்ராஜ் எனபவருக்கு சொந்தமான 4 ஆடுகளை சிறுத்தை தான் கடித்து கொன்றதாக தகவல் பரவியதும் ஆத்திரமடைந்த கிராம மக்கள் உடனடியாக சிறுத்தையை பிடிக்க வேண்டும் என கூறி வனத்துறையினரிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர்.

அதைத்தொடர்ந்து, வாக்குவாதத்தில் ஈடுபட்ட கிராமமக்கள் உடனடியாக சிறுத்தையை பிடிக்காவிட்டால் சாலை மறியலில் ஈடுபட போவதாக தெரிவித்தனர். 

அதைத்தொடர்ந்து வனத்துறையினர் அங்கு கூடியிருந்த அப்பகுதி மக்களுக்கு சிறுத்தைக்கும், நாய்கள் கடித்து ஆடுகள் இறப்பிற்கும் உள்ள வித்தியாசத்தை காண்பித்து விளக்கினர்.

மேலும் கால்நடை டாக்டர் வரவழைக்கப்பட்டு அங்கேயே ஆய்வு செய்யப் பட்டது. அதில் நாய்கள் கடித்ததால் தான் ஆடுகள் இறந்தது தெரியவந்தது. அதன் பின்னரே கிராமமக்கள் அங்கிருந்து கலைந்து சென்றனர். 

இதனால் நஞ்சைபுளியம் பட்டியில் சுமார் 2 மணி நேரம் பரபரப்பு நிலவியது.

Similar News