உள்ளூர் செய்திகள்
கோப்புப்படம்

வேலூரில் ஓரிரு நாட்களில் காவிரி குடிநீர் விநியோகம்

Published On 2022-02-17 15:38 IST   |   Update On 2022-02-17 15:38:00 IST
பாலாற்றில் உடைந்த பைப்லைன் சீரமைக்கப்பட்டதால் வேலூருக்கு ஓரிரு நாட்களில் காவிரி குடிநீர் விநியோகம் செய்யப்படும் என அதிகாரிகள் தெரிவித்தனர்.
வேலூர்:

தமிழகத்தில் கடந்த ஆண்டு பெய்த கனமழையின் காரணமாக பாலாற்றில் வரலாறு காணாத வெள்ளம் பெருக்கெடுத்து ஓடியது.

இந்த வெள்ளத்தின் காரணமாக பாலாற்று படுகையில் புதைக்கப் பட்டிருந்த காவிரி கூட்டு குடிநீர் திட்ட பிரதான பைப் லைன்கள் அடித்து செல்லப்பட்டு சேதமானது. இதனால் காவிரி குடிநீரை நம்பியிருந்த திருப்பத்தூர், வேலூர், ராணிப்பேட்டை மாவட்ட பொது மக்கள் பெரும் அவதிக்குள்ளாகி வருகின்றனர். 

தற்போது பாலாற்றில் உடைந்த காவிரி கூட்டு குடிநீர் பைப்லைன் சீரமைப்பு பணிகள் நிறைவடைந்துள்ளது. இதற்கான சோதனை ஓட்டம் நடந்து வருகிறது. பைப்லைன் உடைந்து இருந்ததால் ஆற்றில் இருந்து மண் சேர்ந்துள்ளது இதனால் கலங்கலாக தண்ணீர் வந்து கொண்டிருக்கிறது. 

ஓரிரு நாட்களில் மாநகராட்சி பகுதிகளில் காவிரி கூட்டுக் குடிநீர் விநியோகம் செய்யப்படும் என்று குடிநீர் வடிகால் வாரிய அதிகாரிகள் தெரிவித்தனர்.

சத்துவாச்சாரி கானார் தெரு, நேதாஜி நகர், அன்பு நகர், டபுள் ரோடு பகுதிகளில் 10 நாட்களுக்கும் மேலாக தண்ணீர் வராததால் பொதுமக்கள் கடும் அவதிக்குள்ளாகினர். கானார் தெருவில் உள்ள சின்டெக்ஸ் குடிநீர் தொட்டியும் பழுதாகி உள்ளதால் அங்குள்ள பொதுமக்கள் பாதிக்கப்பட்டுள்ளனர். 

இதனால் சம்பந்தப்பட்ட அதிகாரிகள் உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என அப்பகுதி பொதுமக்கள் வலியுறுத்தியுள்ளனர்.

Similar News