உள்ளூர் செய்திகள்
சீர்காழி பகுதியில் பிரதம மந்திரி வீடு கட்டும் பணிக்கு அளவீடு
சீர்காழி பகுதியில் அதிக எண்ணிக்கையில் பிரதம மந்திரி வீடு கட்டும் பணிக்கு அளவீடு நடைபெற்றது.
சீர்காழி:
சீர்காழி ஊராட்சி ஒன்றியத்தில் 37 ஊராட்சிகள் உள்ளன. இந்த ஊராட்சிகளுக்கு உட்பட்ட பல்வேறு கிராமங்களில் ஆவாஸ் ப்ளஸ்
பிரதம மந்திரி வீடு கட்டும் திட்டத்தின் கீழ் 1587 பயனாளிகள் தேர்வு செய்யப்பட்டுள்ளனர்.
இதனிடையே பிரதம மந்திரி வீடு கட்டும் திட்டத்தின் கீழ் கட்டப்படவுள்ள வீடுகள் அனைத்துக்கு அளவீடு செய்யும் பணி புங்கனூர், சட்டநாதபுரம், விளந்திடசமுத்திரம், திருவெண்காடு, திருநகரி, மங்கைமடம், திருப்புன்கூர், எடக்குடிவடபாதி உள்ளிட்ட 37 பஞ்சாயத்துக்களிலும் தொடங்கியது.
இந்த பணிகள் சீர்காழி வட்டார வளர்ச்சி அலுவலர்கள் இளங் கோவன், அருள்மொழி, உதவி பொறியாளர்கள் தெய்வானை, கலைசெல்வன், சிவக்குமார் மற்றும் பணிதள மேற்பார்வையாளர்கள் வேலழகன், பிருந்தா, ஓசைநாயகி, சந்திரசேகரன் புங்கனூர் ஊராட்சி தலைவர் ஜுனைதா பேகம் கமாலுதீன் முன்னிலையில் பொறியியல் கல்லூரி மாணவர்கள் உதவியுடன் அளவீடு செய்யப்பட்டது.
இதேபோல் கொள்ளிடம் ஊராட்சி ஒன்றியத்திற்கு உட்பட்ட 42 ஊராட்சிகளிலும் பிரதம மந்திரி வீடு கட்டும் திட்டத்தின் கீழ் வீடு கட்டுமான பணிகளுக்கு அளவீடு செய்யப்பட்டது. இதில் ஒன்றிய ஆணையர் ரெஜினாராணி, உதவி பொறியாளர்கள் பங்கேற்றனர்.
இதுகுறித்து அதிகாரிகள் கூறுகையில், சீர்காழி, கொள்ளிடம் ஒன்றியத்தில் அதிக எண்ணிக்கையில் அரசு கான்கிரீட் வீடு கட்டுவதற்கு மாஸ் மார்க்கிங் என்ற பெயரில் வீடு கட்டும் பணிகள் 16, 17, 18 ஆகிய தேதிகளில் நடைபெறுகிறது.
இத்திட்டத்தின் மூலம் பதிவு செய்யப்பட்ட பயனாளிகளுக்கு விரைவில் வீடு கட்டி முடித்து தருவதற்கு இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது.
அதன்படி பணி தீவிரமாக நடைபெற்று வருகிறது. அரசின் கான்கிரீட் வீடு கட்டுவதற்கு மத்திய மாநில அரசின் பங்குத் தொகையாக ரூ 2 லட்சத்து 75 ஆயிரத்து 40 வீதம் வழங்கப்படுகிறது. ஒவ்வொரு கான்கிரீட் வீட்டுக்கும் 104 மூட்டை சிமெண்ட் மற்றும் 120 கிலோ கம்பி வழங்கப்படுகிறது என்றனர்.