உள்ளூர் செய்திகள்
ஈரோடு மாவட்டம் அத்தாணி பேரூராட்சி 3-வது வார்டு தி.மு.க.வேட்பாளர் மாரடைப்பால் மரணம்
தி.மு.க. வேட்பாளர் அய்யப்பன் இறந்து விட்டதால் அத்தாணி பேரூராட்சி 3-வது வார்டு தேர்தல் ரத்து செய்யப்பட்டதாக அறிவிக்கப்பட்டது.
ஆப்பக்கூடல்:
ஈரோடு மாவட்டம் அத்தாணி பேரூராட்சி 3-வது வார்டு தி.மு.க. வேட்பாளராக அய்யப்பன் (51) என்பவர் போட்டியிடுகிறார். இவர் இந்த பகுதியின் தி.மு.க. செயலாளராகவும் இருந்து வந்தார்.
கடந்த சில நாட்களாக அய்யப்பன் தீவிர பிரசாரம் செய்து வந்தார். தினமும் தனது ஆதரவாளர்களுடன் காலை முதல் இரவு வரை தீவிர பிரசாரம் செய்து வந்தார்.
நேற்று இரவும் பிரசாரம் முடிந்து வீட்டிற்கு வந்த அய்யப்பன் இரவு சாப்பிட்டு விட்டு தூங்க சென்றார்.
அய்யப்பன் இன்று அதிகாலை தனக்கு நெஞ்சு வலிப்பதாக கூறினார். இதையடுத்து அவரை சிகிச்சைக்காக அந்தியூரில் உள்ள ஒரு தனியார் ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றனர். பின்னர் அவரை அந்தியூர் அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்ற போது அவர் மாரடைப்பால் இறந்து விட்டது தெரிய வந்தது.
இதையடுத்து அதிர்ச்சி அடைந்த குடும்பத்தினர் அவரது உடலை பார்த்து கதறி அழுதனர். பின்னர் அவரது உடலை வீட்டிற்கு கொண்டு சென்றனர். அங்கு அவரது உடலுக்கு பொதுமக்கள் அஞ்சலி செலுத்தினர்.
தி.மு.க. வேட்பாளர் அய்யப்பன் இறந்து விட்டதால் அத்தாணி பேரூராட்சி 3-வது வார்டு தேர்தல் ரத்து செய்யப்பட்டதாக அறிவிக்கப்பட்டது.